இந்தியா வந்தார் மாலத்தீவு அதிபர்: ஜெய்சங்கருடன் சந்திப்பு
இந்தியா வந்தார் மாலத்தீவு அதிபர்: ஜெய்சங்கருடன் சந்திப்பு
ADDED : அக் 06, 2024 09:57 PM

புதுடில்லி: மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அரசு முறை பயணமாக டில்லி வந்தடைந்தார். அவரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அழைப்பை ஏற்று 5 நாள் பயணமாக டில்லி வந்தடைந்தார். இந்த பயணத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களை அவர் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவு, பரஸ்பர பலன், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. விமான நிலையத்தில் முய்சுவை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து அவரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக ஜெய்சங்கர் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இந்திய பயணத்தை இன்று துவக்கிய அதிபர் முகமது முய்சுவை சந்தித்தேன். இந்தியா மாலத்தீவு உறவை மேம்படுத்துவதற்கான அவரது உறுதி பாராட்டக்கூடியது. பிரதமர் மோடியுடன் நாளை அவர் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தையானது நமது நட்புறவுக்கு புது உத்வேகம் அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அந்த பதிவில் ஜெய்சங்கர் கூறினார்.
முகமது முய்சு, அரசு முறை பயணமாக இந்தியா வருவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் கடந்த ஜூன் மாதம், பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் அவர் கலந்து கொண்டார்.