ADDED : ஏப் 01, 2025 06:11 AM
திருச்சூர் : கேரளாவில் காங்கிரஸ் எம்.பி., பிரியங்காவின் பாதுகாப்பு வாகனத்தை வழிமறித்த யு டியூபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.,யாக இருப்பவர் பிரியங்கா. காங்கிரசை சேர்ந்த இவர், நேற்று முன்தினம் தன் தொகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
மலப்புரம் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். அனைத்து நிகழ்ச்சிகளும் முடிந்த பின், இரவு 9:30 மணிக்கு கொச்சி விமான நிலையம் திரும்பினார். பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ இவரது வாகனம் சென்றது.
அப்போது, அவரின் பாதுகாப்பு வாகனத்தின் முன்பு சென்ற ஒரு கார், வழிவிடாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால், பாதுகாப்பு வாகனத்தில் சென்ற போலீசார், வழிவிட வலியுறுத்தி தொடர்ந்து ஹார்ன் எழுப்பினர்.
இதனால், எரிச்சல் அடைந்த காரில் இருந்த நபர், பிரியங்கா மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் செல்ல முடியாதபடி, தன் காரை சாலையின் குறுக்கே நிறுத்தினார். பாதுகாப்பு போலீசாரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில், காரை குறுக்கே நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டது எலநாடு பகுதியைச் சேர்ந்த யு டியூப் பிரபலம் அனீஷ் ஆபிரகாம் என தெரியவந்தது.
இதையடுத்து, வி.ஐ.பி., கான்வாய்க்குள் குறுக்கே பாய்ந்தது, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது, போலீசாரின் உத்தரவை மீறியது என, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அவரின் காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

