ADDED : ஏப் 24, 2025 11:17 PM
நியூ உஸ்மான்பூர்: போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்து, 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஹெராயினை பறிமுதல் செய்தனர்.
கபீர் நகரில் கடந்த 4ம் தேதி இம்ரான், 40, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் காரில் இருந்து 315 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. அதை டெலிவரி செய்ய முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், நியூ உஸ்மான்பூரில் வசிக்கும் சூரஜ் என்பவரிடமிருந்து ஹெராயினை வாங்கியதாக இம்ரான் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர்.
கடந்த 21ம் தேதி, சாஸ்திரி பார்க் மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் 97 கிராம் ஹெராயினை டெலிவரி செய்ய முயன்றபோது சூரஜை போலீசார் கைது செய்தனர். அவருக்கு ஐந்து கொள்ளை, கடத்தல் வழக்குகளில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.