ADDED : செப் 08, 2025 11:39 PM

புதுடில்லி : டில்லியில் சமண மத விழாவில், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள கலசத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
டில்லி செங்கோட்டை வளாகத்தில், 15வது கேட் அருகேயுள்ள பூங்காவில், ஒரு வார சமண மத விழா கடந்த 3ம் தேதி துவங்கியது. இந்த விழாவில், சில சடங்குகள் செய்வதற்காக, தொழிலதிபர் சுதிர் ஜெயின் என்பவர் வைரம், மாணிக்கம் மற்றும் மரகதக் கற்கள் பதிக்கப்பட்ட 760 கிராம் எடையுடைய தங்கக் கலசத்தை எடுத்து வந்தார்; இதன் மதிப்பு, 1 கோடி ரூபாய்.
நிகழ்ச்சியின் முடிவில் அந்த கலசம் மாயமாகியிருந்தது. அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், சமண மத துறவி வேடம் அணிந்த நபர், அந்த கலசத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
பல கட்ட தேடுதலுக்கு பின், உத்தர பிரதேசத்தின் ஹபூரைச் சேர்ந்த பூஷன் வர்மா என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்த கலசம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் உள்ள நிலையில், தற்போது கலசத்தை திருடியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சமண மத விழாவில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா வந்த போது, அவரை வரவேற்க அனைவரும் சென்ற சமயத்தில், பூஷன் சர்மா கலசத்தை திருடிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. டில்லி அழைத்து வரப்பட்ட அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.