மாணவி மீது 'ஆசிட்' வீசியதாக கைது செய்யப்பட்டவர் விடுவிப்பு
மாணவி மீது 'ஆசிட்' வீசியதாக கைது செய்யப்பட்டவர் விடுவிப்பு
ADDED : அக் 30, 2025 01:30 AM

புதுடில்லி: கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசியதாக கைது செய்யப்பட்ட வாலிபரை, போலீசார் நேற்று விடுவித்தனர்.
புதுடில்லி அசோக் விஹார் லட்சுமி பாய் கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படிக்கும் 20 வயது இளம்பெண், 26ம் தேதி காலை சிறப்பு வகுப்புக்கு சென்ற போது, பைக்கில் வந்து வழிமறித்த முகுந்த்பூரைச் சேர்ந்த ஜிதேந்தர் மற்றும் அவரது நண்பர்கள் இஷான், அர்மான் ஆகியோர் அந்தப் பெண் மீது ஆசிட் வீசியதாக குற்றம் சாட்டப்பட்டது.
அந்தப் பெண்ணும் தீனபந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை உடனே கைது செய்யும்படி துணைநிலை கவர்னர் சக்சேனாவும் உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிட் வீசியதாக அந்தப் பெண் நாடகம் ஆடியது தெரிய வந்தது.
ஆசிட் வீச்சுக்கு ஆளானதாக கூறப்படும் மாணவி, தன் தந்தை அகில் கான் மற்றும் கழிப்பறை சுத்தம் செய்பவருடன் சேர்ந்து ஆசிட் வீசியதாக நாடகம் ஆடியதை போலீசார் கண்டுபிடித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட ஜிதேந்தர் மனைவி 2021 முதல் 2024 வரை சாக்ஸ் தொழிற்சாலையில் வேலை செய்த போது, மாணவியின் தந்தை அகில்கான், ஜிதேந்தர் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதேபோல, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இஷான் மற்றும் அர்மான் சகோதரர்களின் தாய் ஷப்னமும், 2018ல் தன் மீது அகில்கான் ஆசிட் வீசியதாக புகார் செய்துள்ளார்.
ஷப்னம் மற்றும் அகில்கான் குடும்பத்துக்கு இடையே சொத்துத் தகராறு இருந்ததால், அதை பழி தீர்த்துக் கொள்ள இந்த நாடகத்தை ஆடியுள்ளனர்.
இரு பெண்களிடமும் நடத்திய விசாரணை அடிப்படையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் அகில் கான் மற்றும் அவரது மகன் யூனூஸ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று கைது செய்யப்பட்ட ஜிதேந்தரை, போலீசார் நேற்று விடுவித்தனர்.
இதுகுறித்து, நிருபர்களிடம் ஜிதேந்தர் கூறியதாவது:
ஆசிட் வீசியதாக என் மீது பொய்யாக குற்றம் சாட்டினர். இந்த முழு சம்பவமும் என்னை சிக்க வைக்கும் சதித்திட்டம். சம்பவம் நடந்த நாளில் கரோல் பாகில் வேலை செய்து கொண்டிருந்தேன்.
அன்று இரவு 7:30 மணிக்கு போலீசார் எனக்கு போன் செய்து விசாரணைக்கு அழைத்தனர்.
இந்த விவகாரத்தில் போலீசார் முழுமையாக விசாரணை நடத்தி உண்மையை கண்டறிந்தனர். நான் குற்றமற்றவன் என்பதை உறுதி செய்து விடுவித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

