சுற்றுலாவுக்கு கோவா கிளம்பியவர் குடும்பத்துடன் நடுக்காட்டில் தவிப்பு: கூகுள் மேப்பை நம்பியதால் வந்த துயரம்
சுற்றுலாவுக்கு கோவா கிளம்பியவர் குடும்பத்துடன் நடுக்காட்டில் தவிப்பு: கூகுள் மேப்பை நம்பியதால் வந்த துயரம்
ADDED : டிச 07, 2024 07:57 PM

பாட்னா: கூகுள் மேப்பை நம்பி, பீஹாரில் இருந்து கோவாவிற்கு சுற்றுலா சென்ற குடும்பத்தினர், கர்நாடகாவில் நடுக்காட்டில் தவித்த நிகழ்வு அரங்கேறி உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான ' மேப்' செயலி உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளது. கோடிக்கணக்கானோர் இச்செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில், இச்செயலியை பார்த்து வாகனங்களை இயக்குவதால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. கேரளாவில் பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து 14 பேர் காயமடைந்தனர். இச்செயலி உதவியுடன் பயணித்த மூன்று பேர், கட்டி முடிக்கப்படாத பாலத்தில் பயணித்து உயிரை பறிகொடுத்தனர். இன்னும் சிலர் ஆற்றிலும், குளத்திலும் வாகனங்களை விட்ட நிகழ்வு நடந்துள்ளது. ஒரு சிலர் திக்கு தெரியாத இடத்தில் திணறியதும் நடந்துள்ளது. இந்த வகையில், பீஹாரை சேர்ந்த குடும்பத்தினர் நடுக்காட்டில் தவித்துள்ளனர்.
இது குறித்து வெளியான தகவல்: பீஹாரை சேர்ந்த ரஞ்சித் தாஸ், விடுமுறையை கழிப்பதற்காக குடும்பத்துடன் கோவா செல்ல திட்டமிட்டார். இதற்காக கடந்த 4ம் தேதி காரில் கிளம்பினார். கோவா செல்ல வழி தெரியாத காரணத்தினால், அவர் கூகுள் மேப் செயலி உதவியை நாடி உள்ளார். அச் செயலியும் மஹாராஷ்டிராவின் ஷிரோலி, கர்நாடகாவின் ஹேம்மாடா வழியாக செல்லும்படி வழிகாட்டி உள்ளது. இதனை நம்பி ரஞ்சித் தாஸ் காரில் பயணித்துள்ளார். செயலி வழிகாட்டியபடி கர்நாடகா வந்த இவர், பெலகாவி மாவட்டத்தில் உள்ள பிமகாட் வனப்பகுதிக்குள் சென்றார்.
அந்த வழியே 8 கி.மீ., தூரம் பயணித்த நிலையில், வனத்தின் மையப்பகுதிக்கு சென்ற நிலையில், சிக்னல் கிடைக்காமல் மொபைல் சேவை துண்டிக்கப்பட்டது. இதனால், யாரிடமும் உதவி கோர முடியாமல், ஆபத்து நிறைந்த வனப்பகுதியில் இரவு முழுவதும் இருளில் குடும்பத்துடன் காரிலேயே தவித்துள்ளார். மறுநாள் காலை விடிந்ததும், வந்தவழியே ரஞ்சித் தாஸ் நடந்து சென்றார். 4 கி.மீ.,தூரம் தாண்டிய பிறகு மொபைல் போன் சிக்னல் கிடைத்தது. இதனையடுத்து அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு உதவி கோரினார். இதன் பிறகு, உள்ளூர் போலீசார் வந்து ரஞ்சித் தாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை மீட்டுச் சென்றனர்.
விடுமுறையை கொண்டாட கோவா கிளம்பிய ரஞ்சித் தாசுக்கு, நடுக்காட்டில் தவித்த நிகழ்வு மறக்க முடியாத சோகமாக மாறி உள்ளது.