ADDED : பிப் 20, 2024 12:09 AM
புதுடில்லி:கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு தேடப்பட்டவர், கைது செய்யப்பட்டார்.
டில்லி சாந்தினி சவுக்கில் 2014ம் ஆண்டு தொழிலதிபர் வீட்டிலேயே கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். மேலும், வீட்டில் பணம், நகை உள்ளிட்டவையும் கொள்ளை போயிருந்தன.
இது தொடர்பாக விசாரித்த போலீசார், ராஜ்பீர் மற்றும் சர்வேஷ் ஆகியோரை கைது செய்தனர். இருவரிடமும் நடத்திய விசாரணை அடிப்படையில், முக்கியக் குற்றவாளியான தேவேந்தர் குமாரை தீவிரமாக தேடி வந்தனர்.
டில்லியில் இருந்து தப்பிய தேவேந்தர், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கி இடம் மாறிக்கொண்டே இருந்தார்.
தேவேந்தர் குமார் குறித்து தகவல் அளிப்போருக்கு 50,000 ரூபாய் பரிசுத் தொகையை டில்லி மாநகரப் போலீஸ் அறிவித்தது.
இதையடுத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொடர்பைத் துண்டித்துக் கொண்ட தேவேந்தர், காஜியாபாதில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார்.
அதைக் கண்டுபிடித்த போலீசார், அந்தத் தொழிற்சாலையில் அதிரடி சோதனை நடத்தினர். ஆனால், அவர் தப்பி விட்டார்.
இந்நிலையில், டில்லி ஜூம்மா மசூதி அருகே தேவேந்தர் குமார், போலீசாரிடம் நேற்று பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடக்கிறது.

