படுத்தே விட்டாரய்யா... பாம்புடன் வந்த பாமரன்; பீகாரில் டாக்டர்கள் ஓட்டம்!
படுத்தே விட்டாரய்யா... பாம்புடன் வந்த பாமரன்; பீகாரில் டாக்டர்கள் ஓட்டம்!
UPDATED : அக் 16, 2024 09:53 PM
ADDED : அக் 16, 2024 09:49 PM

பாட்னா: பீகாரில் தன்னை கடித்த அதிக விஷமுள்ள பாம்பை தோளில் போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு வந்த நபரை பார்த்து மருத்துவ பணியாளர்கள் அதிர்ந்து போயினர்.
பாம்புகளிலேயே அதிக விஷமுள்ள பாம்புகளில் ஒன்றாக இருப்பது கண்ணாடி விரியன். இந்த வகை பாம்புகள் கடித்தால், உடனடி மரணம் கூட ஏற்படும் வாய்ப்புள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பீகாரின் பாகல்பூரில் 100க்கும் மேற்பட்ட கண்ணாடி விரியன் பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பாகல்பூரைச் சேர்ந்த பிரகாஷ் மண்டல் என்பவர் தோளில் கண்ணாடி விரியன் பாம்பை போட்டுக் கொண்டு, வேகவேகமாக அங்குள்ள மருத்துவமனைக்கு வந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ந்து போன டாக்டர்கள் மற்றும் அங்கிருந்த சக நோயாளிகள் பயந்தடித்து ஓடியுள்ளனர்.
லுங்கி மற்றும் பனியனுடன் வந்திருந்த பிரகாஷை பாம்பு கடித்து விட்டதாகவும், அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால், கையில் அதிக விஷமுள்ள பாம்பை வைத்திருந்ததால், டாக்டர்கள் சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர்.
ஒரு கட்டத்தில், மருத்துவமனையின் உள்ளே தரையில் படுத்து விட்டு, தனது அருகிலேயே பாம்பையும் கிடத்திப் போட்டு பிடித்து கொண்டார். பின்னர், பாம்பை விட்டு விட்டு வந்தால் சிகிச்சை அளிப்பதாக கூறியதையடுத்து, அதனை வெளியே விட்டு விட்டு வந்து டாக்டர்களிடம் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.