ADDED : டிச 06, 2024 06:53 AM

மங்களூரு: திருமணம் என்பது தேவர்களால் சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்படும் என கூறுவர். இந்த வாசகத்திற்கு ஏற்ப ஒரு காதல் கதை தான், மங்களூரை சேர்ந்த பிருத்விராஜ் உடையது.
பெங்களூரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பிருத்விராஜ் பணியாற்றி வந்தார். கடந்த பிப்ரவரியில், வேலை விஷயமாக, தாய்லாந்து சென்றார். இப்பயணம், அவரது வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்தது.
தாய்லாந்தில், பெண் ஐ.டி., ஊழியரான மொண்டகன் சசுக் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. காதலர் தினவிழாவில் கடற்கரையில் இருவரும் முதன் முறையாக சந்தித்தனர். மொண்டகன் சசுக் பார்ப்பதற்கு, இந்தியர் போன்று இருந்ததால், பிருத்விராஜுக்கு முதல் சந்திப்பிலே, பிடித்து விட்டது. காதலர் தினத்தில் துவங்கிய அவர்கள் சந்திப்பு, நாளடைவில் வலுவான காதலாக உருமாறி, இருவரது மனதிலும் மையம் கொண்டது. திருமணம் செய்வது குறித்து, தங்களது பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளனர். அனுமதி கிடைக்கவில்லை. இருவரும் நடத்திய போராட்டத்தால் அனுமதி வழங்கப்பட்டது.
தாய்லாந்தில் கடந்த ஜூனில், புத்த மதப்படி திருமணம் நடந்தது. சில மாதங்கள் கழித்து புதுமண தம்பதி மங்களூரு வந்தனர். நேற்று, மங்களூரு மங்களாதேவி கோவிலில், ஹிந்து முறைப்படி திருமணம் நடந்தது.
இதில் தாய்லாந்து பெண் காலில் கொலுசு, நெற்றியில் குங்குமம், கழுத்தில் தாலி என மங்களகரமாக காட்சி அளித்தார். இதை பார்த்த அனைவரும், அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். ஜோடியை அனைவரும் வாழ்த்தினர்.
தாய்லாந்து பெண்ணை, இந்திய மருமகளாக்கிய மங்களூரு ஐ.டி., ஊழியரை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.