'மன்மோகன்சிங் 11 மாநில அரசை டிஸ்மிஸ் செய்தார்.. மோடி - பூஜ்ஜியம்'
'மன்மோகன்சிங் 11 மாநில அரசை டிஸ்மிஸ் செய்தார்.. மோடி - பூஜ்ஜியம்'
ADDED : ஏப் 30, 2024 07:22 AM

புதுடில்லி: '10 ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்த மன்மோகன்சிங், தனது ஆட்சிக் காலத்தில், 11 மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்துள்ளார். அதேசமயம், மோடியின் ஆட்சி காலத்தில், இதுவரை எந்த மாநில அரசும் டிஸ்மிஸ் செய்யப்படவில்லை' என, இந்திய அரசின் முன்னாள் சி.இ.ஏ., கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக(சி.இ.ஏ.,), கடந்த 2018 முதல் 2021 வரை பதவி வகித்துள்ளார். இவர் அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் யுனிவர்சிட்டியில் உள்ள கெல்லாக் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனிடம் இந்த கருத்தை கூறியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியாவில் ஜனநாயகம் நழுவுகிறது என்ற குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்துள்ளார்.
ஸ்டார்ட்-அப்கள் 220 சதவீத வளர்ச்சி:
மேலும் அவர் கூறுகையில், 'ஸ்டார்ட்-அப்கள், ஒரு நாட்டின் பொருளாதாரத்தில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. 2016ஆம் ஆண்டில், இந்தியாவில், 450 ஸ்டார்ட்-அப்கள் இருந்தன. தற்போது ஒரு லட்சம் ஸ்டார்ட்-அப்கள் உள்ளன. இது 220 சதவீத வளர்ச்சி ஆகும். 2004 முதல் 2014 வரை(காங்., ஆட்சி) ஸ்டார்ட்-அப்களின் வளர்ச்சி, வெறும் 3.8 சதவீதம் தான்.
2015ம் ஆண்டு, உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில், இந்தியா 78 வது இடத்தில் இருந்தது. தற்போது 40வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. நியூயார்க்கின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு, ஜனநாயகத்தின் அளவீடு குறித்து, விமர்சிப்பவர்களை புறம்தள்ள வேண்டும்' என்றார்.
ரகுராம் ராஜன் குற்றச்சாட்டு:
அப்போது குழுவில் இருந்த, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் குறுக்கிட்டு, 'இன்று இந்தியாவில் ஜனநாயகம் வலுவாக உள்ளது என்று கூறிவிட்டு தப்பிக்க முடியாது. தற்போதைய அரசு விமர்சனங்களை விரும்புவதில்லை. மேலும், இந்த அரசு, மக்கள் தங்களோடு இணைய வேண்டும்; இல்லை என்றால் சிறைக்கு செல்ல வேண்டும் என்ற கொள்கையுடன் உள்ளது' என்று வாதிட்டார்.
உறுதியான நம்பிக்கை:
இதற்கு பதிலளித்து பேசிய சுப்பிரமணியன், 'பிரதமர் மோடியுடன் நான் நெருக்கமாக பணியாற்றி இருக்கிறேன். அரசின் சாதகமான அம்சங்கள் குறித்து, அவர் ஒருபோதும் என்னிடம் பேசியதில்லை. இந்தியாவில் மேம்படுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து மட்டுமே அவர் என்னிடம் பேசி இருக்கிறார். ஒரு பக்கமான நிலைப்பாட்டில் இதை நான் கூறவில்லை. மோடி அரசின் பாலிசிகளில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது.
மத சுதந்திரம்:
மத சுதந்திரம் குறித்து பியூ ஆராய்ச்சி மையம், ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அதில் 90 சதவீத சிறுபான்மையினர், இந்தியாவில் பிடித்த மதத்தை கடைப்பிடிப்பது, முற்றிலும் சுதந்திரமானது என்று கூறியதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
வாஜ்பாய், மோடி - பூஜ்ஜியம்:
356வது சட்டப்பிரிவை பயன்படுத்தி, மத்திய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட மாநில அரசுகளின் தரவுகளைப் பார்ப்போம். ஜவஹர்லால் நேரு, 7 மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்தார். இந்திரா, 49 மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்தார். ராஜிவ் 60 மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்தார். அதேசமயம், வாஜ்பாய் மற்றும் மோடி ஆட்சிக்காலத்தில், எந்த மாநில அரசும் இதுவரை டிஸ்மிஸ் செய்யப்பட்டதில்லை.' இவ்வாறு அவர் கூறி உள்ளார். அவரது இந்த விவாதம் மற்றும் தரவுகள், பிரதமர் மோடியின் ஆட்சியில், இந்தியா சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளதை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.
356வது சட்டப்பிரிவை, 50 முறை இந்திரா பயன்படுத்தியதாகவும், காங்கிரஸ் அரசு, 90 முறை மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்ததாகவும், கடந்த ஆண்டு பிப்ரவரியில், பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

