மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் தீவிரம்: மஹா.,வில் பதற்றம்
மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் தீவிரம்: மஹா.,வில் பதற்றம்
UPDATED : ஜன 27, 2024 03:35 PM
ADDED : ஜன 26, 2024 10:21 PM

மும்பை : “மஹாராஷ்டிரா அரசின் இலவச கல்விக் கொள்கையில் மராத்தியர்களையும் சேர்க்கும் வகையில் திருத்தம் செய்யாவிட்டால் போராட்டம் நிச்சயம்,” என, மராத்தா சமூகத் தலைவர் மனோஜ் ஜரங்கே எச்சரித்துள்ளார். இதனால் மஹாராஷ்டிராவில் பதற்றம் நிலவுகிறது.
மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு கோரி, அதன் தலைவர் மனோஜ் ஜரங்கே போராட்டம் நடத்தி வருகிறார்.
கடந்த நவம்பரில் ஜல்னா மாவட்டம் அந்தர்வாலி சாரதி கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அவர், இந்த விவகாரத்தில் குடியரசு தினத்தன்று மும்பையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கப் போவதாக அறிவித்தார்.
இதையடுத்து, ஜல்னா மாவட்டத்தில் இருந்து மும்பையை நோக்கிய நடைபயணத்தை கடந்த 20ல் அவர் துவக்கினார். ஷீரடி, புனே, லோனாவாலா உள்ளிட்ட பகுதிகளை கடந்த மனோஜ், நேற்று மும்பை வந்தடைந்தார். அவருக்கு மராத்தா சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின், நவி மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சவுக்கில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பெண்குழந்தைகள் போல், ஆண்குழந்தைகளும் இலவசக் கல்வி பெறும் வகையில் இலவசக் கல்விக் கொள்கையில் திருத்தம் செய்ய வேண்டும்.
மழலையர் பள்ளி முதல் பட்ட மேற்படிப்பு வரை, அனைத்து மராத்தியர்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் கொள்கையில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும். மாநிலத்தில் உள்ள அனைத்து மராத்தா சமூக மக்களுக்கும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த குன்பி ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்.
இது தொடர்பான அவசர சட்டம் நிறைவேற்றப்படாவிட்டால், மும்பையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
போராட்டம் தீவிரம்அடைந்துள்ளதால், மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது.

