அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் எதிரொலி: பங்குச்சந்தைகளில் கிடுகிடு உயர்வு
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் எதிரொலி: பங்குச்சந்தைகளில் கிடுகிடு உயர்வு
UPDATED : பிப் 04, 2026 04:03 PM
ADDED : பிப் 03, 2026 11:17 AM

மும்பை: அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில், பங்குச்சந்தையில் கிடுகிடு உயர்வு ஏற்பட்டது.
இந்தியா, அமெரிக்கா இடையே நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வர்த்தக ஒப்பந்தம் நேற்று இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்திய பொருட்கள் மீதான வரி விதிப்பு, 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தொழில் துறைக்கு அபார வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக, பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை 3500 புள்ளிகள் (4.4 சதவீதம்) அதிகரித்தது. 50 முன்னணி நிறுவனங்களின் பங்குகளை கொண்ட நிப்டி இன்டெக்ஸ், 4.7 சதவீதம் இன்று காலை உயர்ந்தது.
அதானி பங்குகள் விலை
பங்குச்சந்தையில், குறிப்பாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் விலை 13 சதவீதம் விலை அதிகரித்தது. அதானி என்டர்பிரைசஸ், அதானி கிரீன், அதானி பவர், அதானி எனர்னி சொல்யூசன்ஸ் என அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் தாறுமாறாக விலை உயர்ந்து விற்பனையாகின.
இன்றைய வர்த்தகம் முடிவில், மும்பை சென்செக்ஸ், 2073 புள்ளிகள் உயர்ந்து 83,739 ஆக இருந்தது. இது, 2.54 சதவீதம் அதிகரிப்பாகும். இந்த உயர்வு மூலம், சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மதிப்பு ரூ.12 லட்சம் கோடி அதிகரித்தது. இதேபோல, நிப்டி இன்டெக்ஸ், 640 புள்ளிகள் உயர்ந்து 25,727 என நிலை பெற்றது. இது, 2.55 சதவீதம் உயர்வாகும்.
ரூபாய் மதிப்பும் உயர்வு
அதேபோல, கடந்தாண்டில் சரிந்து கொண்டே வந்த இந்திய ரூபாய் மதிப்பு, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பாரெக்ஸ் சந்தை திறந்தவுடன் ஒரு சதவீதம் அதிகரித்தது.
இன்றைய பாரெக்ஸ் வர்த்தகம் முடிவில் டாலர் மதிப்பு 90.26 ரூபாய் ஆக இருந்தது. இது, முந்தைய தினத்தை காட்டிலும், 1.36 சதவீதம் உயர்வாகும். 2018ம் ஆண்டுக்கு பிறகு, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, இந்தளவுக்கு அதிகரித்திருப்பது இதுவே முதல் முறை.

