ஜோடியாக தங்குவதற்கு திருமண சான்றிதழ் கட்டாயம்: 'ஓயோ' அறிவிப்பு
ஜோடியாக தங்குவதற்கு திருமண சான்றிதழ் கட்டாயம்: 'ஓயோ' அறிவிப்பு
ADDED : ஜன 07, 2025 03:07 AM

புதுடில்லி : 'எங்களின் தங்கும் விடுதிகளில் தங்குவதற்கு வரும் தம்பதியர், தங்களின் திருமணச் சான்றிதழை காட்ட வேண்டும். திருமணமாகாத ஜோடிகளுக்கு ரூம் ஒதுக்க முடியாது' என, 'ஓயோ' நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்குவதற்கு ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் வசதியை அளிக்கிறது ஓயோ இணையதளம். இந்த தளத்துடன், பல ஹோட்டல்கள் ஒப்பந்தம் செய்துஉள்ளன.
இதன்படி, இந்த இணையதளத்தில் முன்பதிவு செய்து, அந்த ஹோட்டல்களில் தங்கிக் கொள்ளலாம்.
இந்நிலையில், ஓயோ நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பல சமூக அமைப்புகள் முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளன. இதன்படி, திருமணமாகாத ஜோடிகள் ஹோட்டல்களில் தங்குவதற்கு ரூம் ஒதுக்க வேண்டாம் என்று கேட்டுள்ளன. இந்த கோரிக்கை நியாயமானதாக உள்ளது.
சமுதாயத்தின் மதிப்பை மதித்தும், நம் பாரம்பரியத்தை மதித்தும், உத்தர பிரதேசத்தின் மீரட்டில் உள்ள எங்களுடைய தங்கும் விடுதிகள் மற்றும் எங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள ஹோட்டல்களில் புதிய நடைமுறை, ஜன., 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி, திருமணமாகாத ஜோடிகளுக்கு ரூம் வழங்கப்படாது. முன்பதிவு செய்யும்போதும், ஹோட்டலுக்கு வரும்போதும், தம்பதியர் தங்களுடைய திருமண உறவை உறுதி செய்யும் திருமணச் சான்றிதழ் போன்றவற்றை காட்ட வேண்டும்.
சந்தேகம் இருந்தால், ரூம் வழங்குவதை அந்தந்த ஹோட்டல்கள் மறுக்கலாம்.
இந்தக் கட்டுப்பாடு எந்தளவுக்கு செயல்படுகிறது என்பதை பொறுத்து மற்ற நகரங்களுக்கும் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஆதரித்தும், எதிர்த்தும், சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

