உச்ச நீதிமன்ற தீர்ப்பு நூறு சதவீதம் செயல்படுத்தப்படும் தெருநாய் விவகாரத்தில் மேயர் ராஜா இக்பால் சிங் உறுதி
உச்ச நீதிமன்ற தீர்ப்பு நூறு சதவீதம் செயல்படுத்தப்படும் தெருநாய் விவகாரத்தில் மேயர் ராஜா இக்பால் சிங் உறுதி
ADDED : ஆக 23, 2025 01:23 AM

புதுடில்லி:“தெருநாய்கள் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு நூறு சதவீதம் செயல்படுத்தப்படும்,” என, மேயர் ராஜா இக்பால் சிங் கூறினார்.
தேசிய தலைநகர் பிராந்தியத்தில் தெருநாய்களை எட்டு வாரங்களுக்குள் பிடித்து, காப்பகங்களில் அடைத்து பராமரிக்க, டில்லி உயர் நீதிமன்றம், 11 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை விலங்குகள் நல ஆர்வலர்கள் தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்கள் மீது, 14ம் தேதி விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேற்று அளித்த தீர்ப்பில், 'தெருநாய் களுக்கு கருத்தடை செய்து, தடுப்பூசி செலுத்தி அதே பகுதியில் மீண்டும் விடுவது உட்பட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.
எதிர்பார்ப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, டில்லி மாநகராட்சி மேயர் ராஜா இக்பால் சிங், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். தீர்ப்பில் கூறப்பட்டுள்ளவற்றை நூறு சதவீதம் செயல்படுத்துவோம்.
உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் மாநகராட்சி முழு பலத்துடன் செயல்படும். மேலும், ஆக்ரோஷமாக தாக்கும் நாய்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
நாய்கள் நம் அனைவருக்கும் பிரியமானவை. ஆனால், அவற்றால் மக்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
மாநகராட்சியின், 20 விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு மையங்கள் முழுவீச்சில் செயல்படும். தெருநாய்களுக்கு கருத்தடை செய்து, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் முழு கவனம் செலுத்தப்படும்.
உயர் நீதிமன்ற உத்தரவிட்ட போது, விலங்கு நல ஆர்வலர்கள் ஏராளமானோர் வருத்தம் தெரிவித்தனர். பலர் போராட்டங்கள் நடத்தி, போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஆனால் இப்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பால் அவர்களும் திருப்தி அடைந்துள்ளனர்.
மனிதர்களைப் போலவே, தெருநாய்களைப் பாதுகாப்பதிலும் மாநகராட்சி கவனம் செலுத்தும். ஆக்ரோஷமான அல்லது மக்களைத் தாக்கும் தெருநாய்களை மட்டும் காப்பகங்களில் அடைத்து பராமரிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொசு ஒழிப்பு ரயில் கொசுக்களால் பரவும் நோய்களை கட்டுப்படுத்த டில்லி மாநகராட்சி மற்றும் வடக்கு ரயில்வே ஆகியவை இணைந்து, 'கொசு ஒழிப்பு ரயில்' அறிமுகம் செய்துள்ளது.
புதுடில்லி ரயில் நிலையத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கொசு ஒழிப்பு ரயிலை மேயர் ராஜா இக்பால் சிங் கொடியசைத்து துவக்கி வைத்து பேசியதாவது:
கொசு முட்டையை அழிக்கும் மருந்து தெளிக்கும் 'பவர் ஸ்ப்ரேயர்'கள் பொருத்தப்பட்டுள்ள லாரிகள், ரயிலின் கார்டு பெட்டிக்கு அடுத்ததாக இணைக்கப்பட்டுள்ளன.
இந்த தெளிப்பான் வாயிலாக தண்டவாளங்களின் இருபக்கமும், -60 மீட்டர் துாரத்துக்கு மருந்து தெளிக்கப்படும்.
மழையால் தண்டவாளம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் தேங்கும் நீரில் கொசு இனப்பெருக்கம் நடப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்களை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இது வெறும் ரயில் மட்டுமல்ல, டில்லி மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் கேடயம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஒத்துழைப்பு டில்லி மாநகராட்சி கமிஷனர் அஸ்வினி குமார் பேசுகையில், “இந்த கூட்டு நடவடிக்கையால் லட்சக்கணக்கான மக்களின் சுகாதாரம் பாதுகாக்கப்படும்.
துாய்மை மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை நோக்கமாக கொண்டு மாநகராட்சியில் பணிகள் முடுக்கி விடப் பட்டுள்ளன.
டில்லியில் வசிக்கும் ஒவ்வொருவரும் மாநகராட்சியின் இந்த துாய்மைப் பணிக்கு ஒத்துழைக்க வேண்டும். வீடுகள் மற்றும் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும்,” என்றார்.
கூடுதல் கமிஷனர் பங்கஜ் நரேஷ் அகர்வால், பொது சுகாதார அதிகாரி அசோக் ராவத் மற்றும் வடக்கு ரயில்வே அதிகாரிகள் பங்கேற்றனர்.