பிரபல மலேசிய தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் காலமானார்!
பிரபல மலேசிய தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் காலமானார்!
UPDATED : நவ 29, 2024 08:48 PM
ADDED : நவ 29, 2024 11:42 AM

சென்னை: பிரபல மலேசிய தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 86.
மலேசியாவில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் ஆனந்த கிருஷ்ணன். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழர். ஆஸ்திரேலியாவிலும், பின்னர் அமெரிக்காவிலும் படித்து பட்டம் பெற்றவர். சிறு வயது முதலே பல்வேறு தொழில்களை தொடங்கிய இவர், மலேசியாவின் நான்காவது பெரிய பணக்காரர் என்ற அளவுக்கு சொத்துக்களை குவித்தார்.
இவரது சொத்து மதிப்பு 45 ஆயிரம் கோடி ரூபாய். இவர் தொலைத்தொடர்பு, செயற்கைக்கோள்கள், எண்ணெய், ரியல், எஸ்டேட், காஸ் என பல்வேறு துறைகளில் தொழில் நடத்திய ஜாம்பவான் ஆனந்தகிருஷ்ணன்.
இவர் கலை, கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளுக்கு அளித்த நன்கொடை ஏராளம். இவருக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவரது மகன் வென் அஜான் சிரிபான்யோ, சில ஆண்டுகளுக்கு முன், பவுத்த துறவியாக மாறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனந்தகிருஷ்ணன், 86, நேற்று கோலாலம்பூரில் காலமானார். அவரது மறைவுக்கு தொழில் துறையினர், அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மிரட்டல்
தனது மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மூலமாக, அப்போது இந்தியாவில் பிரபலமாக இருந்த aircel மொபைல் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார் ஆனந்த கிருஷ்ணன்.
பிற்காலத்தில், இந்த முதலீடு அவருக்கு பெரும் தலைவலியாக போனது. அவர் மீது ஊழல் வழக்கு பதிவானது. மிரட்டல்களையும் அவர் எதிர் கொண்டார். அரசியல் மிரட்டல்களை சமாளித்து திறம்பட தொழில் செய்தவர் ஆனந்த கிருஷ்ணன் என்கின்றனர் அவரை அறிந்தவர்கள்.