ADDED : ஜன 19, 2025 01:52 AM

பீதர் :வானிலை ஆய்வுக்காக டி.ஐ.எப்.ஆர்., எனும் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பிய மின்னணு ஆய்வுப் பொருள், கர்நாடகாவின் பீதர் மாவட்டத்தின் கிராமத்தில் விழுந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.
கர்நாடகாவின் பீதர் மாவட்டம், ஹூம்னாபாத்தின் ஜலசங்கி கிராமத்தில் நேற்று காலை பயங்கர சத்தம் கேட்டது.
அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், சத்தம் வந்த இடத்துக்குச் சென்றனர். அங்கு பெரிய மின்னணு பொருள் விழுந்து கிடந்தது. மேலும் அப்பகுதி இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்ததும் தெரிய வந்தது. அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதை பார்த்த பலரும், அந்த பொருள் அருகில் செல்ல பயந்தனர். தங்கள் குழந்தைகளையும் தடுத்தனர். சில இளைஞர்கள் தைரியத்துடன் அருகில் சென்று பார்த்தனர்.
அந்த பொருள், டாடா ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சொந்தமான மின்னணு ஆய்வுப் பொருள் என்பது தெரிய வந்தது.
இதுதொடர்பாக போலீசாருக்கு, கிராமத்தினர் தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார், ஹைதராபாத் ஆராய்ச்சி நிறுவனத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வானிலை ஆய்வுக்காக இந்த மின்னணு ஆய்வு பொருள் பலுானுடன் நேற்று முன்தினம் காலை, ஹைதராபாதில் இருந்து பறக்கவிடப்பட்டிருந்தது.
இந்த பலுான், ஆறு முதல் ஏழு மணி நேரம் வரை மட்டுமே வானத்தில் பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.
அதன் நேரம் முடிந்ததால், நேற்று அதிகாலையில் கீழே விழுந்துள்ளது. அந்த மின்னணு ஆய்வு பொருளில், 'இந்த சாதனம், வானிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. இதை பார்க்கும் நீங்கள், அதை சேதப்படுத்தாமல் உடனடியாக எங்களுக்கு தகவல் தரவும்' என கன்னடம், ஆங்கிலம், மராத்தி ஆகிய மொழிகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது பற்றி ஹைதராபாதை சேர்ந்த டி.ஐ.எப்.ஆர்., சென்டருக்கு போலீசார் தகவல் அளித்தனர். அங்கு வந்த அதிகாரிகளிடம், 'மின்னணு ஆய்வுப் பொருள் விழுந்ததில் இளைஞர் காயமடைந்துஉள்ளார்' என்றனர்.
அவருக்கு நிவாரணம் வழங்கிய பின், மின்னணு ஆய்வுப் பொருளை எடுத்துச் சென்றனர்.
இதனால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மின்னணு ஆய்வுப்பொருளை பார்த்த கிராம மக்கள். இடம்: பீதர், கர்நாடகா.