மிசோரமில் 4.79 கோடி ரூபாய் 'மெத்' மாத்திரைகள் பறிமுதல்
மிசோரமில் 4.79 கோடி ரூபாய் 'மெத்' மாத்திரைகள் பறிமுதல்
ADDED : நவ 23, 2025 04:27 AM

அய்ஸ்வால்: தடை செய்யப்பட்ட, 'மெத் ஆம்பெட்டமைன்' மாத்திரைகள் மற்றும் ஹெராயின் பதுக்கி வைத்திருந்த மியான்மர் நாட்டினர் இருவர் உட்பட நான்கு பேரை மிசோரம் எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 4.79 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
வடகிழக்கு மாநிலமான மிசோரமின் அய்ஸ்வால் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 6ல், போதைப்பொருள் கடத்தப்படுவதாக மிசோரம் சுங்கத்துறை மற்றும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள், பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து செலிங் மற்றும் துய்ரியல் கிராமங்கள் இடையே சந்தேகத்திற்கிடமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில் போதைப்பொருள் எதுவும் சிக்கவில்லை. எனினும், அதில் வந்த மியான்மர் நாட்டைச் சேர்ந்த இருவரிடம் நடத்திய விசாரணையில், போதைப்பொருள் வாங்க அய்ஸ்வால் செல்வதாக கூறினர். இதை தொடர்ந்து அவர்களுடன் சென்ற அதிகாரிகள், அய்ஸ்வாலின் சந்த்மாரி மேற்கு பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த மேலும் இருவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட மெத் ஆம்பெட்டமைன் மாத்திரைகள், 5.89 கிலோவும், 41 கிராம் ஹெராயினையும் பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த மதிப்பு, 4.79 கோடி ரூபாய். கைதான நான்கு பேரையும் விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

