ADDED : அக் 07, 2025 05:59 AM

பாட்னா : பீஹாரில் சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன், தலைநகர் பாட்னாவில், 'மெட்ரோ' ரயிலின் முதல்கட்ட சேவையை முதல்வர் நிதிஷ் குமார் நேற்று துவக்கி வைத்தார்.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, நவ., 6 மற்றும் 11ல் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.
இதற்கான அறிவிப்பு நேற்று வெளியாவதற்கு சில மணி நேரம் முன், தலைநகர் பாட்னாவில், 3.45 கி.மீ., தொலைவுக்கான முதல்கட்ட மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் நிதிஷ் குமார் துவங்கி வைத்தார். இந்த வழித்தடத்தில், பொதுமக்கள் பிரதானமாக பயன்படுத்தும் பாடலிபுத்ரா பஸ் நிலையம், ஜீரோ மைல், பூத்நாத் ஆகிய மூன்று ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.
இதே வழித்தடத்தில், பூமிக்கு அடியில், 9.35 கி.மீ., தொலைவுக்கு 2,565.80 கோடி ரூபாய் மதிப்பிலான பாட்னா ஜங்ஷன் உட்பட ஆறு ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிக்கு முதல்வர் நிதிஷ் குமார் நேற்று அடிக்கல் நாட்டினார்.
இவ்வழித்தடத்தில் பயணியருக்கான சேவை இன்று முதல் துவங்கப்பட உள்ளது.
அதிகபட்சமாக, 30 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.