'ஹனி டிராப்' வாயிலாக ராணுவ ரகசியம் கசிந்தது அம்பலம்! பாக்.,குடன் தொடர்பில் இருந்த ஆயுத ஆலை ஊழியர் கைது
'ஹனி டிராப்' வாயிலாக ராணுவ ரகசியம் கசிந்தது அம்பலம்! பாக்.,குடன் தொடர்பில் இருந்த ஆயுத ஆலை ஊழியர் கைது
UPDATED : மார் 15, 2025 10:52 AM
ADDED : மார் 15, 2025 04:13 AM

பெரோசாபாத்: நம் நாட்டின் ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,க்கு கசியவிட்டதாக, உத்தர பிரதேசத்தில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியரை, பயங்கரவாத எதிர்ப்பு படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பெண்களை வைத்து மயக்கும், 'ஹனி டிராப்' முறையில், இந்த ஊழியரிடமிருந்து ரகசியங்களை ஐ.எஸ்.ஐ., அமைப்பு பெற்றது அம்பலமாகி உள்ளது.
உத்தர பிரதேசத்தின் பெரோசாபாதில் ஆயுத தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, நம் ராணுவத்துக்கு தேவையான 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள், நவீன துப்பாக்கிகள் உள்ளிட்ட தளவாடங்கள் தயாரிக்கப்படுகின்றன.
இங்குள்ள ஆயுதங்கள் தயாரிக்கும் பிரிவில் ரவீந்திரநாத் என்பவர் பணிபுரிந்து வருகிறார். சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்த இவரை, 'பேஸ்புக்' வாயிலாக நேஹா சர்மா என்ற பெண் கடந்தாண்டு தொடர்பு கொண்டார்.
தளவாடங்கள்
தான் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யில் பணிபுரிவதாக கூறிய அவர், பல ஆசை வார்த்தைகள் கூறி ரவீந்திரநாத்தை வலையில் வீழ்த்தினார். இந்திய ராணுவம் தொடர்பான தகவல்களை தனக்கு தரும்படியும் நேஹா கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
அவரது பேச்சு மற்றும் அழகில் மயங்கிய ரவீந்திரநாத், ஆயுத தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் தளவாடங்கள் தொடர்பான விபரங்களை நேஹா சர்மாவுடன் பகிர்ந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக புகார் எழுந்ததை அடுத்து, ரவீந்திரநாத்திடம் உத்தர பிரதேச பயங்கரவாத எதிர்ப்பு படை போலீசார் விசாரணை நடத்தினர்.
நேரடி தொடர்பு
அவரது மொபைல் போனை பறிமுதல் செய்த அதிகாரிகள், சோதனை நடத்தினர். அதில், நேஹா சர்மாவின் பெயரை 'சந்தன் ஸ்டோர் கீப்பர் 2' என்ற பெயரில் அவர் பதிந்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொழிற்சாலையின் தினசரி தயாரிப்பு பட்டியல், அரசு அறிக்கைகள், ரகசிய கடிதங்கள், ட்ரோன்கள் தயாரிப்பு தொடர்பான ஆவணங்கள், ககன்யான் திட்டம் பற்றிய விபரங்கள் உள்ளிட்ட பல ஆவணங்களை 'வாட்ஸாப்' வாயிலாக நேஹாவுக்கு, ரவீந்திரநாத் அனுப்பியிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதற்காக, கணிசமான தொகை வழங்குவது குறித்து அவர் பேரம் பேசியிருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் ரவீந்திரநாத் நேரடி தொடர்பில் இருந்ததும், ரகசிய ஆவணங்களை கசியவிட்டதும் தெரியவந்ததை அடுத்து, அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவரது நெருங்கிய நண்பரான ஆக்ராவைச் சேர்ந்த நபரும் கைது செய்யப்பட்டார். இருவரின் மொபைல் போன்களிலும், இந்திய ராணுவ ரகசியங்கள் கசியவிட்டது தொடர்பாக நடந்த பேச்சு உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.