எத்னாலின் தொழிற்சாலைக்கு நோட்டீஸ் பா.ஜ.,வினர் மீது அமைச்சர் குற்றச்சாட்டு
எத்னாலின் தொழிற்சாலைக்கு நோட்டீஸ் பா.ஜ.,வினர் மீது அமைச்சர் குற்றச்சாட்டு
ADDED : ஜன 29, 2024 07:20 AM

விஜயபுரா: ''பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னாலுக்கு சொந்தமான தொழிற்சாலைக்கு நோட்டீஸ் அனுப்பியதில் அக்கட்சியினர் கைவரிசை உள்ளது,'' என, கனரக, நடுத்தர தொழிற்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் குற்றஞ்சாட்டினார்.
இதுகுறித்து, விஜயபுராவில் நேற்று அவர் கூறியதாவது:
சுற்றுச்சூழல் விதிகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னாலுக்கு சொந்தமான சர்க்கரை ஆலைக்கு, கர்நாடக மாசுக்கட்டுப்பாடு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சட்டப்படியே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
எத்னாலோ, நானோ அல்லது வேறு யாராவதோ விதிமுறைகளை மீறியிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவேளை மாநில மாசுக்கட்டுப்பாட்டு ஆணையம் அளித்த நோட்டீஸ் சரியில்லை என்றால், நீதிமன்றத்தை எத்னால் நாடட்டும்.
மாநில சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணைய தலைவர் எங்களுடையவர் அல்ல. பா.ஜ., ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்டவர். எனவே எத்னால் தொழிற்சாலைக்கு நோட்டீஸ் அனுப்பியதில், காங்கிரஸ் அரசியல் செய்யவில்லை. இந்த விஷயத்தில், பா.ஜ.,வின் கைவரிசை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.