அமைச்சர் ஹர்தீப் சிங் குற்றம் செய்யவில்லை: 'எப்ஸ்டீன் பைல்ஸ்' விவகாரத்தில் அரசு விளக்கம்
அமைச்சர் ஹர்தீப் சிங் குற்றம் செய்யவில்லை: 'எப்ஸ்டீன் பைல்ஸ்' விவகாரத்தில் அரசு விளக்கம்
ADDED : பிப் 28, 2026 06:28 AM

புதுடில்லி: அமெரிக்காவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனின் ஆவணங்களில், மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் பெயர் காணப்பட்ட நிலையில், இது தொடர்பாக துறை ரீதியாக ஆய்வு நடத்திய மத்திய அரசு, அவருக்கு எதிராக எந்த குற்றமும் கண்டறியப்படவில்லை என கூறியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இவர் அமெரிக்கா மட்டுமின்றி சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்க மனிதர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.
அது மட்டுமின்றி சிறுமியரை வைத்து பாலியல் தொழில் நடத்தியதாகவும், அவர்களை பெரிய மனிதர்களுக்கு அனுப்பி தனக்கு வேண்டிய காரியங்களை சாதித்துக் கொண்டதாகவும் புகார்கள் உள்ளன.
இதற்காக, 2019ல் கைது செய்யப்பட்டு நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த ஆண்டிலேயே சிறையில் மர்மமான முறையில் துாக்கிட்டு இறந்தார்.
அவருடன் தொடர்புடைய நபர்கள் குறித்த தகவல், 'எப்ஸ்டீன் பைல்ஸ்' என்ற பெயரில் அமெரிக்க நீதிமன்றத்தால் வெளியிடப்பட்டது. இதில், தற்போது மத்திய அமைச்சராக உள்ள பா.ஜ.,வைச் சேர்ந்த ஹர்தீப் சிங் புரியின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
காங்கிரஸ் இந்த விவகாரத்தை பெரும் சர்ச்சை ஆக்கியது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து துறை ரீதியான விசாரணையை மத்திய அரசு நடத்தியது.
அதில், 'அமைச்சர் ஹர்தீப் சிங்குக்கு எதிராக எந்த குற்றமோ அல்லது தவறான தொடர்போ கண்டறியப்படவில்லை.
'எனவே, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அல்லது அமைச்சரவையிலிருந்து நீக்க எந்த காரணமும் இல்லை' என முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறின.
தற்போதைக்கு, அவரது பதவிக்கு உடனடி பாதிப்பு இல்லை. உத்தர பிரதேசத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினராக உள்ள புரியின் பதவிக்காலம் நவம்பர் 25 உடன் முடிகிறது. மீண்டும் அவரை நியமிப்பது குறித்து கட்சி தலைமையே இறுதி முடிவு எடுக்கும் என பா.ஜ.,வினர் கூறினர்.

