ADDED : பிப் 08, 2025 06:22 AM

விஜயபுரா: “மைக்ரோ நிறுவனம் தொடர்பான, அவசர சட்டத்தை கவர்னர் சரியாக புரிந்து கொள்ளவில்லை. இதனால் அவசர சட்டத்தை திருப்பி அனுப்பியுள்ளார்,” என, மாநில சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.
விஜயபுராவில் அவர் நேற்று அளித்த பேட்டி:
மைக்ரோ நிறுவனத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக, அவசர சட்டத்தை கவர்னர் சரியாக புரிந்து கொள்ளவில்லை.
தவறான புரிதலால், சரியான தகவல் தெரியாததால், சட்டத்தில் கையெழுத்திட மறுத்துள்ளார். இது குறித்து தெளிவுபடுத்தி, அனுமதி கோருவோம்.
சட்டப்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் அல்லது நபர்கள் நியாயமான முறையில் கடன் கொடுத்திருந்தால், அதை வசூலிக்க அரசு தடை விதிக்கவில்லை. இந்த அம்சம் அவசர சட்டத்தில் இடம் பெறவில்லை.
கடனை வசூலிக்க சட்டவிரோதமாக நடந்து கொள்வது, மக்களை இம்சிப்பது, நெருக்கடி தருவதை தடுப்பது குறித்து சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நியாயமாக நடந்து கொள்ளும் எந்த நபர்களின் உரிமைகள், சட்டரீதியான போராட்டங்களுக்கு அடிப்படை உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையும், அவசர சட்டத்தில் இல்லை.
10 ஆண்டு சிறை தண்டனை, ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பற்கு, ஜாமின் இல்லாத தண்டனை விதிப்பதற்கு கவர்னர் ஆட்சேபம் தெரிவிப்பது சரியல்ல.
கடன் கொடுத்த தொகை அடிப்படையில் தண்டனை, அபராதம் நிர்ணயிக்கவில்லை.
கடனை வசூலிக்கும்போது, மக்களுக்கு தொந்தரவு, இம்சை, நெருக்கடி கொடுப்பதை தடுக்க, தண்டனை, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியாயத்துக்கு எந்த அம்சங்களும், அவசர சட்டத்தில் இல்லை.
பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் கொடுப்பது, வசூலிப்பது குறித்து, அவசர சட்டத்தில் குறிப்பிடவில்லை.
தற்போதுள்ள சட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றும் வகையில், கடுமையான அஸ்திரங்கள் இல்லை.
இவர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதால், மாநில அரசு அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்து, அவசர சட்டம் வகுத்தது.
கடன் கொடுத்தவர்களின் பாதுகாப்பு குறித்தும், சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அவசர சட்டம் குறித்து, சட்டசபையில் விவாதிக்கப்படும். அனைவரின் கருத்துகளை கேட்டறிந்து, முடிவு செய்யப்படும்.
அவசர சந்தர்ப்பத்தில், மக்களின் உதவிக்கு வர, அரசியல் சாசனத்தில் வாய்ப்புள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மைக்ரோ நிதி நிறுவனத்தை கட்டுப்படுத்த, சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
தன் எல்லைக்குள் மாநில அரசு செயல்படுகிறது என்பதை, கவர்னரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.