ADDED : டிச 13, 2024 11:00 PM
பெலகாவி: “குழந்தை பெற்ற பெண்கள், பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் வையுங்கள்,” என, மருத்துவ ஊழியர்களுக்கு மாநில மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் உத்தரவிட்டார்.
பெலகாவி மாவட்ட மருத்துவமனையில், குழந்தை பெற்ற பெண்கள், பச்சிளம் குழந்தைகள் இறந்தனர். இதுகுறித்து தகவல் கேட்டறிய மாநில மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீலுடன், பெலகாவியின் அரசு மருத்துவமனைக்கு நேற்று சென்றிருந்தார்.
பிரசவ வார்டு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு, மருந்துகள் சேகரித்து வைத்துள்ள குடோன் உட்பட, பல இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். அதிகாரிகளிடம் தகவல் கேட்டறிந்தனர். நோயாளிகளிடம் பிரச்னைகளை கேட்டனர்.
அதன்பின் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், ''மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கர்ப்பிணியர், குழந்தை பிரசவித்த பெண்கள், பச்சிளம் குழந்தைகளின் நலனில் கூடுதல் கவனம் வையுங்கள். மருத்துவமனைக்கு நல்ல பெயர் கிடைக்கும் வகையில் பணியாற்றுங்கள்,'' என மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

