குளிர்காலந்தோறும் 'நைனி ஏரி விழா' சுற்றுலாத் துறைக்கு அமைச்சர் உத்தரவு
குளிர்காலந்தோறும் 'நைனி ஏரி விழா' சுற்றுலாத் துறைக்கு அமைச்சர் உத்தரவு
ADDED : மே 27, 2025 09:12 PM
மாடல்டவுன்:கலாசார நடவடிக்கைகளை மேம்படுத்தவும் சுற்றுலாவை ஊக்கப்படுத்தவும் மாடல் டவுனில் உள்ள நைனி ஏரியை மேம்படுத்துவதற்கான திட்டத்தை வகுக்கும்படி சுற்றுலாத்துறை அதிகாரிகளை மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
நைனி ஏரியை மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் அவர் கூறியதாவது:
சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் நைனி ஏரியை மேம்படுத்துவதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு குளிர்காலத்திலும் கலாசார நிகழ்ச்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில் 'நைனி ஏரி விழா' நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக நைனி ஏரியை அழகுபடுத்தப்பட உள்ளது. லேசர் ஷோக்கள், எல்.இ.டி., லைட் அலங்காரங்கள், இசை நீரூற்றுகள், சிறிய கபேக்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உருவாக்கப்படும்.
குடும்பத்துடன் பயணம் செய்யும் வகையில் மின் அலங்கார படகுகள் உருவாக்கப்படும். வருவாயை அதிகரிக்க தற்போதுள்ள உணவகமும் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.