இந்திய துாதரகம் மீது தாக்குதல் : வெளியுறவு துறை கண்டனம்
இந்திய துாதரகம் மீது தாக்குதல் : வெளியுறவு துறை கண்டனம்
UPDATED : ஜன 23, 2026 01:25 AM
ADDED : ஜன 23, 2026 01:18 AM

புதுடில்லி: க்ரோவேஷியாவில் உள்ள இந்திய துாதரகம் மீது, காலிஸ்தான் ஆதரவாளர் அத்துமீறி நுழைந்து தேசிய கொடியை இறக்கி, காலிஸ்தான் கொடியை ஏற்றிய சம்பவத்திற்கு, நம் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடான க்ரோவேஷியா தலைநகர் ஜாக்ரெப்பில், இந்திய துாதரகம் உள்ளது. சமீபத்தில் இங்கு அத்துமீறி நுழைந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள், துாதரக வளாகத்தை சேதப்படுத்தியதுடன், அங்கு பறந்த நம் நாட்டு தேசியக் கொடியை கழற்றிவிட்டு, காலிஸ்தான் கொடியை பறக்கவிட்டனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வெளியானது. இந்தியா - ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடு, வரும் 27ல் டில்லியில் நடைபெற உள்ள நிலையில், இந்த தாக்குதல் சர்ச்சையானது.
இது குறித்து நம் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: க்ரோவேஷியாவில் உள்ள இந்திய துாதரகத்தில், தேச விரோத சக்திகள் அத்துமீறி நுழைந்து, வளாகத்தை சேதப்படுத்தியதை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது. வியன்னா உடன்படிக்கையின் படி, துாதரக வளாகங்கள் அனுமதி இல்லாமல் யாரும் நுழைய முடியாதவை. அது பாதுகாக்கப்பட வேண்டும்.
அதன்படி, இந்த விவகாரம் தொடர்பாக இங்கு உள்ள க்ரோவேஷியா துாதரக அதிகாரிகள் மற்றும் அந்நாட்டு அதிகாரிகளிடமும் பாதுகாப்பு கவலைகள் குறித்து வலியுறுத்தி உள்ளோம். இந்த சட்டவிரோத செயல்களுக்கு காரணமான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

