கரடுமுரடான செங்குத்து மலைப்பாதையிலும் சாலை விதியை பின்பற்றும் மிசோரம் மக்கள்
கரடுமுரடான செங்குத்து மலைப்பாதையிலும் சாலை விதியை பின்பற்றும் மிசோரம் மக்கள்
UPDATED : செப் 07, 2025 01:28 AM
ADDED : செப் 07, 2025 01:26 AM

அடர்ந்த மலைகளும், காடுகளும் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக, மிசோரம் இருக்கிறது. இயற்கை சூழ்ந்து மாசு இல்லாமல், எங்கு பார்த்தாலும் தேக்கு, மூங்கில், வாழை மரங்களால் ரம்மியமாக காட்சியளிக்கிறது. 90 சதவீதம் மலைகளால் சூழ்ந்துள்ள இந்த மாநிலத்தில், மொத்தம் 13 லட்சம் பேர் வசிக்கின்றனர். இதில், தலைநகர் ஐஸ்வாலில் மட்டுமே நான்கு லட்சம் பேர் வசிக்கின்றனர்.
![]() |
இந்த மக்களுக்கான உணவு பொருட்கள், ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், அசாம் மாநிலம் கவுஹாத்தி, சில்சாரில் இருந்து சாலை மார்க்கமாக, தினமும் ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன.
ஐஸ்வாலை தவிர, மற்ற நகரங்களில் மிக குறைவான மக்களே வசிக்கின்றனர். சில இடங்களில், 15 குடும்பங்களே ஒரு குழுவாக வசிக்கின்றனர். செங்குத்தான மலைப் பாதையில், குறுகிய சாலைகளில் லாரிகளும், கார்களும் வரிசையாக செல்கின்றன. எந்த இடத்திலும், சாலை விதிமீறல்களை பார்க்க முடியவில்லை.
சில இடங்களில் நீண்ட நேரமாக, வாகனங்கள் காத்திருந்தாலும், 'ஹாரன்' சத்தம் இல்லை. பொறுமையாக காத்திருந்து செல்லும் வாகன ஓட்டிகள் பாராட்டுக்கு உரியவர்கள்.
மலைப் பகுதிகளில் வாகனங்களை ஓட்டும் சிலர் கூறியதாவது:
எங்கள் மாநிலத்தில் சாலை போக்குவரத்து தான் பிரதானம். அன்றாட உணவு பொருட்கள் உட்பட, அனைத்து பொருட்களும் சாலை மார்க்கமாகதான் வருகின்றன. அனைத்து சாலைகளும் மலையிலேயே இருப்பதால், வாகனம் ஓட்டுவது என்பது எங்களுக்கு இயல்பாகவே பழகிய தொழிலாக இருக்கிறது.
வெளியூரில் இருந்து யார் வந்தாலும், உரிய நிறுத்தம் இல்லாத இடத்தில், வாகனங்களை நிறுத்தக் கூடாது; ஹாரன்களை பயன்படுத்தக் கூடாது; கட்டாயம் 'சீட் பெல்ட்' அணிய வேண்டும்; இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம், 'ஹெல்மெட்' அணிய வேண்டும் என, அறிவுறுத்துகிறோம்.
அதை நாங்களும் பல ஆண்டு காலமாக பின்பற்றுகிறோம். சாலை பாதுகாப்பு என்பது, அனைவரின் கூட்டு முயற்சி.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -