ADDED : மார் 04, 2024 07:10 AM
பெங்களூரு: லோக்சபா தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, ஆலோசனை நடத்த ம.ஜ.த., மகளிர் பிரிவினர் பெங்களூரில் இன்று கூட்டம் நடத்துகின்றனர்.
கர்நாடக ம.ஜ.த., பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து, லோக்சபா தேர்தலுக்கு தயாராகிறது. தொகுதி பங்கீடு இன்னும் இழுபறியில் உள்ளது.
கோலார், மாண்டியா, ஹாசன், துமகூரு தொகுதிகளை ம.ஜ.த., எதிர்பார்க்கிறது. இதற்கு அந்தந்த மாவட்டங்களின் பா.ஜ., தலைவர்கள் முட்டுக்கட்டை போடுகின்றனர்.
மாநில ம.ஜ.த., தலைவர் குமாரசாமி, தேசிய தலைவர் தேவகவுடா, தொடர் கூட்டம் நடத்தி கட்சியை தேர்தலுக்கு தயாராக்குகின்றனர். இதற்கிடையில் மகளிர் படையும், களத்தில் குதித்துள்ளது.
கர்நாடக ம.ஜ.த., மகளிர் பிரிவினர், பெங்களூரில் இன்று கூட்டம் நடத்துகின்றனர்.
புதிய தலைவியாக ரஷ்மி ராமேகவுடா நியமிக்கப்பட்ட பின், நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும்.
லோக்சபா தேர்தலுக்கு, மகளிர் தொண்டர்கள் தயாராவது, கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு, மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள், கூட்டணி கட்சியான பா.ஜ., வேட்பாளர்களின் வெற்றிக்காக பணியாற்றுவது;
பா.ஜ.,வுடன் இணைந்து, மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்த திட்டம் வகுப்பது, கட்சியை பலப்படுத்துவது, பெங்களூரு மாநகராட்சி தேர்தல், நகர உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படும்.
