மொபைல் திருடனுக்கு கிடைத்த நூதன தண்டனை: பீஹாரில் அதிர்ச்சி சம்பவம்
மொபைல் திருடனுக்கு கிடைத்த நூதன தண்டனை: பீஹாரில் அதிர்ச்சி சம்பவம்
ADDED : ஜன 18, 2024 05:03 PM

பாட்னா: பீஹாரில் ஓடும் ரயிலில், வெளியில் இருந்து மொபைல் போன் பறிக்க முயன்ற திருடனின் கைகளை பயணிகள் பிடித்து இழுத்து சென்றனர். இதனால், அந்த திருடன் சுமார் ஒரு கி.மீ., தூரம் ஜன்னலில் தொங்கியபடி பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் எப்போது நடந்தது என்ற தகவல் வெளியாகவில்லை.
பீஹாரின் பகல்பூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் ரயில் கிளம்பிய நிலையில், அங்கு நின்றிருந்த திருடன் ஜன்னல் வழியாக பயணி ஒருவரின் மொபைல் போனை பறிக்க முயன்றான். சுதாரித்து கொண்ட பயணி, திருடனின் கைகளை இறுக பிடித்து கொண்டார். மற்றவர்களும் திருடனின் கைகளை பிடித்தனர்.
இதனால், செய்வது அறியாது தவித்த அந்த திருடன், அவர்களிடம் இருந்து தப்பிக்க, எடுத்த அனைத்து முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை. இதனால், சுமார் ஒரு கி.மீ., தூரம் ஜன்னல் கம்பிகளுக்கு மத்தியில் தொங்கியபடி பயணித்தான்.
அவனுக்கு வேண்டப்பட்டவர்கள் என கருதப்படும் சிலர் வந்து அவனை மீட்டு சென்றனர். இதனை சக பயணிகள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றன்.