ADDED : பிப் 21, 2024 06:49 AM

பெங்களூரு : தமிழர்கள் வாழ்வில் ஒரு அங்கமாக திகழும், பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையம், 480 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்படுகிறது.
பெங்களூரின் பழமையான கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை, நவீன முறையில் மேம்படுத்த, தென்மேற்கு ரயில்வே திட்டமிட்டது. இதற்காக மத்திய ரயில்வே அமைச்சகத்தின் அனுமதியும் பெறப்பட்டது.
இந்த ரயில் நிலையத்தை சுற்றிலும் உள்ள பகுதிகளில், பெருமளவு தமிழர்கள் வசிக்கின்றனர். அவர்கள், தங்களது ஊர்களுக்கு செல்ல, இந்த ரயில் நிலையத்தையே அதிகம் பயன்படுத்துவதால், அவர்கள் வாழ்வில், இது ஒரு அங்கமாகவே திகழ்கிறது.
↓ரூ.480 கோடி
இந்த ரயில் நிலையத்தை 480 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த, 2020ல் பிரதமர் மோடி பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டினார்.
இப்பணிகள், அடுத்த ஆண்டு நவம்பரில் முடியும் என்று, ரயில்வே அதிகாரிகள் கூறி உள்ளனர். புதுப்பிக்கப்படும் ரயில் நிலையம், விமான நிலைய மாதிரியில் அமைக்கப்படுகிறது.
ரயில் நிலையம் முழுதும் குளிரூட்டப்படும். ஆயிரக்கணக்கான வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தம், மாற்றுத்திறனாளி பயணியர் வசதிக்காக பல்வேறு வசதிகள், ரயில் நிலையத்திற்கு செல்லும் வகையில் சுரங்கபாதை உட்பட பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, புதிதாக இரட்டை பாதை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கூடுதலாக தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
புதிய சாலை
கன்டோன்மெண்ட் ரயில் நிலையத்தின் முன் பக்க நுழைவு வாயில் முன்புறம், சாலை செல்கிறது. ஹெப்பால், ஜே.சி.நகர் பகுதிகளில் இருந்து குயின்ஸ் ரோடு, வசந்த்நகருக்கு வாகனங்களில் வருவோர், இந்த சாலையில் பயணித்து இடது புறம் சென்றால் போட்டரி டவுன், டேனரி ரோடு செல்லலாம். வலது பக்க சாலையில் சென்றால் குயின்ஸ் ரோட்டை அடையலாம்.
இந்நிலையில், ரயில் நிலையத்தில் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருவதால், ரயில் நிலையம் முன் செல்லும் சாலை மூடப்படும்.
இதனால், பஸ் உட்பட வாகனங்கள் செல்வதற்கு வசதியாக, இதன் அருகில் புதிய சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில் புதிய பஸ் நிறுத்தமும் அமைக்கப்பட்டு உள்ளது.
ஆனாலும் குயின்ஸ் ரோடு, போட்டரி டவுனுக்கு செல்லும் சாலைகளை பிரிக்கும் இடம், இன்னும் குறுகலாகவே உள்ளது. இதனால் அந்த இடத்தில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
கட்டடங்கள் இடிப்பு
இது குறித்து, ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இன்னும் ஒரு மாதத்தில், ரயில் நிலையத்தில் நவீன முறையில் பணிகள் துரிதப்படுத்தப்படும். இந்த பணிகள் துவங்கினால், ரயில்வே போலீஸ் நிலைய கட்டடமும் இடிக்கப்படும். எங்களுக்கு வேறு இடத்தில், அலுவலகம் ஒதுக்கி தருவதாக கூறி உள்ளனர். பணிகள் துவங்கி விட்டால், ரயில் நிலையம் முன் உள்ள சாலைகள், நடைமேம்பாலம் அகற்றப்படும்.
'புதிதாக சாலை அமைத்து உள்ளனர். விரிவாக தான் உள்ளது. ஆனால் குயின்ஸ் ரோடு, போட்டரி டவுனை பிரிக்கும் இடத்தில் உள்ள சாலை, குறுகலாக உள்ளது. குயின்ஸ் ரோட்டிற்கு செல்வோருக்கு, மாற்று வழி ஏற்படுத்திக் கொடுத்தால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம்' என்றார்.

