UPDATED : செப் 18, 2024 08:06 PM
ADDED : செப் 18, 2024 05:23 PM

புதுடில்லி: இந்திய பிரதமராக நரேந்திர மோடி 3வது முறையாக பதவியேற்று 100 நாட்கள் நேற்றுடன் கடந்து போயின. இதில் விசேஷம் என்னவென்றால் அவரது 74வது பிறந்த நாளில் 100 வது நாளும் வந்தது ஒரு ஆச்சரியம்.
நேருவுக்குப் பிறகு 3வது முறையாக மோடி பிரதமரானது ஒரு சாதனை என்றால் கடந்த 50 ஆண்டுகளில் 3வது முறை பிரதமரானது இவர் மட்டுமே என்பது இன்னொரு சாதனை.
சாதாரண குடும்பத்தில் பிறந்து, ஆர்எஸ்எஸ் ஊழியராக பணியை துவக்கி, பின்பு பாஜ கட்சியில் இணைந்து குஜராத் முதல்வராகி, பின்னர் நாட்டின் பிரதமராக உயர்ந்தவர். இதனால் வறுமையில் வாடும் மக்களின் கஷ்டத்தை உணர்ந்தவர். அதனாலேயே அவரது திட்டங்கள், செயல்பாடுகள் வறியவர்களை கைதுாக்கி விடும் வகையிலேயே இருக்கும். இதுவே அவரை 3வது முறையாக பிரதமராக மக்கள் தேர்வு செய்ததற்கு முக்கிய காரணம்.
சில முக்கிய திட்டங்கள்:
* ஓய்வூதியம் பெறுவோருக்கு 70 வயது ஆகிவிட்டால் மருத்துவ காப்பீடு
* விவசாயிகளுக்கு உதவித் தொகை
* விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு
* விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் திட்டம்
* ஏழைகளுக்கு மானியத்துடன் சொந்த வீடு கட்ட கடன்
* சூரிய மின்சார திட்டங்கள்
* ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முன்னுரிமை
* விண்வெளி திட்டங்களுக்கு அதிக நிதி உதவி
* ரயில்களின் வேகத்தை அதிகரித்து, நவீன வந்தே பாரத் ரயில் திட்டம்
* நீர் வழி போக்குவரத்தை மேம்படுத்த சாகர்மாலா
* பொருளாதார வளர்ச்சியை முன்னேற்ற பாதையிலேயே வைத்திருப்பதுஇவை தவிர, நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் என தனிப்பட்ட சிறப்பு திட்டங்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
அவரது தொலைநோக்கு பார்வை 2047ல் இந்தியாவை வளர்ந்த நாடாக்குவது தான்.
மூன்றாவது முறையாக பதவியேற்றபோதே, உயர் அதிகாரிகளை அழைத்த மோடி, நாட்டின் வளர்ச்சிக்கு 100 நாட்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று திட்டங்களை தயார் செய்யுங்கள் என உத்தரவிட்டார். ஏற்கனவே நடந்துகொண்டு இருக்கும் திட்டங்களும் நடக்கப்போகும் திட்டங்களும் எவ்வித தடையில்லாமல் நடக்க வேண்டும் என்பதற்காகத் தான் அவர் இவ்வாறு உத்தரவிட்டார்.
அவரது எண்ணப்படி அனைத்தும் சரியாக நடந்தால், அடுத்து வரும் ஒவ்வொரு 100 நாட்களும் ஜோரான நாட்களாக இந்தியாவுக்கு இருக்கும்.

