டி-ஜிட்டல் கைது என மிரட்டும் மோசடி நபர்கள் எச்சரிக்கையாக இருக்க மோடி 'அட்வைஸ்' * மன் கீ பாத் நிகழ்ச்சியில் மோடி அறிவுரை
டி-ஜிட்டல் கைது என மிரட்டும் மோசடி நபர்கள் எச்சரிக்கையாக இருக்க மோடி 'அட்வைஸ்' * மன் கீ பாத் நிகழ்ச்சியில் மோடி அறிவுரை
ADDED : அக் 27, 2024 11:26 PM
புதுடில்லி: “தற்போது நடந்து வரும் டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற எந்த ஒரு நடைமுறையும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏமாற்றுகாரர்களிடம் இருந்து தப்பிக்க, நிதானிக்கவும், சிந்திக்கவும், பிறகு செயல்படவும்,” என, பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை கூறினார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், 'மன் கீ பாத்' எனப்படும் மனதின் குரல் என்ற ரேடியோ நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுடன், பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு விஷயங்கள் தொடர்பான கருத்துகளை பகிர்ந்து வருகிறார்.
அதன்படி நேற்று ஒலிபரப்பான ரேடியோ நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:
மக்களிடையே ஒரு முக்கியமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று, பலரும் என்னிடம் கேட்டனர். அதாவது, டிஜிட்டல் கைது என்ற மோசடி குறித்தே அவர்கள் கூறினர்.
மொபைல் போன்களில், வீடியோ அழைப்பு வாயிலாக அழைத்து உங்கள் மீது புகார் உள்ளது; வழக்கு உள்ளது. உங்களை கைது செய்யப் போகிறோம் என்று மிரட்டுவர்.
சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, ரிசர்வ் வங்கி, போலீஸ் அதிகாரி என்று கூறி, உங்களை டிஜிட்டல் கைது செய்யப் போவதாக கூறுவர்.
இந்த மோசடிகாரர்கள், உங்களை பற்றிய முழு விபரங்களை சேகரித்து வைத்திருப்பர்.
அதை பயன்படுத்தி, உங்களை மிரட்டி பார்ப்பர். இந்த நேரத்தில்தான், மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
டிஜிட்டல் கைது என்ற ஒரு நடைமுறையே கிடையாது. அதுபோல, ஆன்லைன் வாயிலாகவோ, மொபைல்போன் வாயிலாகவோ எந்த அமைப்பும் விசாரணை நடத்தாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த விஷயத்தில் நிதானிக்கவும், சிந்திக்கவும், செயல்படவும் என்ற மூன்று முக்கிய அம்சங்களை மனதில் கொள்ள வேண்டும்.
அதாவது உங்களுடைய தகவல்களை கூறி உங்களை மிரட்டும்போது, பதற்றம்அடையாமல் நிதானமாக இருக்க வேண்டும். அந்த அழைப்பை பதிவு செய்து கொள்ளுங்கள்.
உங்களுடைய ஆதார் உள்ளிட்ட தகவல்களை கேட்டால், வங்கிக் கணக்கில் இருந்து பணப் பரிமாற்றம் செய்யக் கூறினால், நன்றாக சிந்தித்து, மோசடிகாரர்களின் வலையில் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இதன்பின், இந்த சம்பவம் தொடர்பாக உங்களுடைய குடும்பத்தார், நண்பர்களிடம் தெரிவியுங்கள். போலீசில் புகார் கொடுக்கவும்.
இது போன்ற மோசடி கும்பல்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க, மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. சைபர் குற்றங்கள் தொடர்பான இணையதளத்தில் புகார்களை பதிவு செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.