மோடி அரசின் 10 ஆண்டு சாதனை... பட்டியல்! புதிய பார்லி.,யில் ஜனாதிபதி உரை
மோடி அரசின் 10 ஆண்டு சாதனை... பட்டியல்! புதிய பார்லி.,யில் ஜனாதிபதி உரை
ADDED : பிப் 01, 2024 12:57 AM
'புதுடில்லி 'பொருளாதார முன்னேற்றம், பயங்கரவாதத்துக்கு எதிரான கடும் நடவடிக்கை, மகளிர் மசோதா, ஜம்மு -- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, பெண்களுக்கு அதிகாரமளித்தல், வறுமை ஒழிப்பு என, கடந்த, 10 ஆண்டுகளில் மத்திய அரசின் சாதனை பட்டியல் மிக நீளமானது. இதில் முத்தாப்பாய், பல நுாற்றாண்டு காத்திருப்புக்குப் பின், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது,'' என, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பார்லிமென்டில் நடத்திய உரையில் தெரிவித்தார்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஜனாதிபதியின் உரையுடன் துவங்கியது. புதிய பார்லிமென்டில், தன் முதல் உரையை ஜனாதிபதி திரவுபதி முர்மு நிகழ்த்தினார்.
லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், கடந்த, 10 ஆண்டுகளில் மத்திய அரசின் சாதனைகளை அவர் தன் உரையில் பட்டியலிட்டார். பார்லிமென்ட் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று பேசியதாவது:
நடவடிக்கை
கடந்த, 10 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட சீரிய நடவடிக்கைகளால், உடைந்துவிடக் கூடிய ஐந்து பொருளாதாரங்களில் இருந்த நம் நாடு, உலகின் மிகப் பெரும் ஐந்து பொருளாதார நாடுகள் பட்டியலில் சேர்ந்துள்ளது.
கடந்த, 10 ஆண்டுகளில், பல பெரும் சாதனைகள், தேசிய நலனில் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பல நுாற்றாண்டுகளாக மக்கள் காத்திருந்த தருணம் நினைவானதையும் சந்தித்தோம்.
கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது.
கோவில் திறக்கப்பட்ட, ஐந்து நாட்களில், 13 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். இதுவே, இதற்கு அத்தாட்சியாகும்.
ஜம்மு -- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது, பல கேள்விகள், சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அவையெல்லாம் தற்போது வரலாறாக மாறிவிட்டது. முத்தலாக் தடையை இந்த பார்லிமென்ட் நிறைவேற்றியது மற்றொரு பெரும் சாதனையாகும்.
அதுபோல, லோக்சபா மற்றும் சட்டசபைகளில், பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை, ஒருமனதாக நிறைவேற்றியதற்காக, இந்த பார்லிமென்டுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்து கொள்கிறேன்.
பயங்கரவாதம் மற்றும் ஆக்கிரமிப்பு நோக்கங்களை தடுத்து நிறுத்தியதுடன், எல்லையில் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமானது. பல ஆண்டுகளுக்கு முன்பே இவை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
பெண்களின் பங்களிப்பு
இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகிய பிரிவினரே, நாட்டின் வளர்ச்சிக்கான துாண் என்ற கோட்பாட்டுடன் இந்த அரசு செயல்படுகிறது. பெண்களின் வளர்ச்சிக்காக, நாட்டின் வளர்ச்சியில் அவர்களுடைய பங்களிப்புக்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சந்திரயான் -- 3, ஆதித்யா விண்கலங்கள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு, விண்வெளி துறையில் பெரும் சாதனை படைக்கப்பட்டது.
விளையாட்டு துறை என, அனைத்து துறைகளிலும், உலக நாடுகளுக்கு கடும் போட்டியை நம் நாடு கொடுத்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜனாதிபதியின் மிகவும் விரிவான மற்றும் ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய உரை, 140 கோடி மக்களின் ஒன்றுபட்ட வலிமையை பறைசாற்றுவதாக உள்ளது. நம் நாடு புரிந்த சாதனைகளை தெரிவித்ததுடன், எதிர்கால தொலைநோக்கு பார்வையையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நரேந்திர மோடி
பிரதமர்