மத்திய அரசை எதிர்த்து காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்: சோனியா அறிவிப்பு
மத்திய அரசை எதிர்த்து காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்: சோனியா அறிவிப்பு
UPDATED : டிச 20, 2025 06:58 PM
ADDED : டிச 20, 2025 06:31 PM

புதுடில்லி: 100 நாள் வேலைத்திட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த தொண்டர்களுக்கு காங்கிரஸ் எம்பி சோனியா அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் பேசியதாவது; 20 ஆண்டுக்கு முன்பு மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் பார்லிமென்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இது ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த சட்டப்பூர்வ உரிமையை வழங்கியது, கிராமப் பஞ்சாயத்துகளை வலுப்படுத்தியது, மகாத்மா காந்தியின் கனவுகளை முன்னெடுத்துச் சென்றது.
இப்படிபட்ட சூழலில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பாஜ அரசு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இது உழைக்கும் மக்கள் மீதான புல்டோசர் தாக்குதல். இது ஒரு கட்சி விவகாரம் அல்ல, தேச நலன் சார்ந்தது. 100 நாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியது மட்டுமல்லாமல், அந்தத் திட்டத்தின் கட்டமைப்பையும் மத்திய அரசு மாற்றியுள்ளது. எந்த விவாதமும் நடத்தாமல், எதிர்க்கட்சியினரை கலந்தாலோசிக்காமல், இந்தத் திட்டத்தில் மாற்றங்கள் திணிக்கப்பட்டுள்ளன.
மோடி அரசு நாடு முழுவதும் கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் நலன்களை சிதைத்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக மத்திய அரசு கிராமப்புற ஏழைகளின் நலன்களைப் புறக்கணித்து வருகிறது.
100 நாள் வேலை திட்டத்தை நீக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்தக் கருப்புச் சட்டத்தை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்த்து போராட வேண்டும். என்னைப் போன்ற அனைத்து காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களுடன் நிற்கிறோம், என்று அவர் கூறினார்.
125 நாட்களாக அதிகரிப்பு
சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய திட்டத்தின்படி, 100 நாட்கள் வேலையானது, 125 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வேலைவாய்ப்பு அதிகரிக்கவே செய்யும். எனினும் இந்த திட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சியினர் எதிர்த்து பார்லியில் போராட்டம் நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, இப்போது சோனியா நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

