வலுவான ஜனநாயகத்தின் அடித்தளம்; அரசியலமைப்பு தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து
வலுவான ஜனநாயகத்தின் அடித்தளம்; அரசியலமைப்பு தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து
ADDED : நவ 26, 2025 10:32 AM

புதுடில்லி: அரசியலமைப்பு மூலம் மக்களுக்கு வழங்கப்படும் கடமைகள், வலுவான ஜனநாயகத்தின் அடித்தளம் என்று அரசியலமைப்பு தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்; இந்த தினத்தில் அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம். அவர்களின் தொலைநோக்கு பார்வை விக்சித் பாரத் (சுயசார்பு இந்தியா) என்ற இலக்கை நோக்கி நாம் முன்னோக்கி செல்ல ஊக்குவிக்கின்றன.
கண்ணியம், சமத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றுக்கு நமது அரசியலமைப்பு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. இது நமக்கு உரிமைகளை வழங்கும் போதே, குடிமக்களாகிய நமது கடமைகளையும் நினைவூட்டுகிறது. இந்தக் கடமைகளை நிறைவேற்ற நாம் எப்போதும் முயற்சிக்க வேண்டும். இது வலுவான ஜனநாயகத்தின் அடித்தளமாகும். நமது செயல்கள் மூலம் அரசியலமைப்பு மதிப்புகளை வலுப்படுத்த நாம் உறுதியேற்போம், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அறிக்கை; இந்தியா அனைத்து மக்களுக்கும் சொந்தமானது. எந்தவொரு கலாசாரத்திற்கோ அல்லது ஒரு சித்தாந்தத்திற்கோ சொந்தமானதல்ல. இந்த அரசியலமைப்பு தினத்தில் அம்பேத்கரின் எண்ணத்தை சிதைக்கும் ஒவ்வொரு சக்தியையும் எதிர்ப்போம் என்று உறுதியேற்க வேண்டும்.
நமது அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள கூட்டாட்சிக் கோட்பாட்டையும், ஒவ்வொரு மாநிலத்தின் உரிமைகளையும் பாதுகாக்கவும், தேவையான அனைத்தையும் செய்வோம். நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தைக் கண்டு அஞ்சும் சக்திகளிடமிருந்து நமது குடியரசை பாதுகாப்பதே, நமது அரசியலமைப்புக்கு செய்யும் உண்மையான மரியாதையாகும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
காங்., எம்பி ராகுல் அறிக்கை; இந்திய அரசியலமைப்பு என்பது ஒரு புத்தகம் மட்டுமல்ல. இது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் செய்யப்பட்ட ஒரு புனித வாக்குறுதியாகும்.
ஒருவர் எந்த மதம் அல்லது சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்தப் பகுதியில் இருந்து வந்தவராக இருந்தாலும், எந்த மொழியைப் பேசினாலும், ஏழையாக இருந்தாலும், சமத்துவம், மரியாதை மற்றும் நீதி கிடைக்கும் என்பதே அந்த வாக்குறுதி.
அரசியலமைப்பு என்பது ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஒரு பாதுகாப்பு கேடயம். அது அவர்களின் வலிமை மட்டுமல்லாமல், இது ஒவ்வொரு குடிமகனின் குரலாக இருக்கிறது. அரசியலமைப்பு பாதுகாப்பாக இருக்கும் வரை, ஒவ்வொரு இந்தியனின் உரிமைகளும் பாதுகாப்பாக இருக்கும்.
அரசியலமைப்பின் மீது எந்தவிதமான தாக்குதலையும் நாம் அனுமதிக்க மாட்டோம் என உறுதி மேற்கொள்வோம். அதைப் பாதுகாப்பது எனது கடமை, அதன் மீதான ஒவ்வொரு தாக்குதலுக்கும் நான் முன்னால் நின்று எதிர்ப்பேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

