விவசாயிகளுக்கு உதவுவதில் பிரதமர் எப்போதும் தாமதிக்க மாட்டார்; அமித்ஷா
விவசாயிகளுக்கு உதவுவதில் பிரதமர் எப்போதும் தாமதிக்க மாட்டார்; அமித்ஷா
ADDED : அக் 05, 2025 04:04 PM

அஹில்யாநகர்: விவசாயிகளுக்கு உதவுவதில் பிரதமர் மோடி எப்போதும் தாமதம் செய்ய மாட்டார் என்று மஹாராஷ்டிராவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவுக்கு சென்றுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது; முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸூம் இருந்து போது, பாஜ தலைமையிலான அரசு, அவுரங்காபாத்தின் பெயரை அஹில்யாபாய் என்று மாற்றம் செய்தது. இதுமாதிரியான முடிவுகளை சத்ரபதி சிவாஜி மீது பற்று கொண்டவர்கள் மட்டுமே எடுக்க முடியும். இந்த மாவட்டம் (அஹில்யாநகர்) அஹில்யா பாயின் பெயரோடு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
கனமழை காரணமாக மஹாராஷ்டிராவில் 60 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான விளைநிலங்கள் மற்றும் பயிர்கள் சேதமடைந்துள்ளன. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸூம், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் என்னுடன் நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது, மஹாராஷ்டிரா அரசு விரிவான அறிக்கையை அளிக்க உத்தரவிட்டுளேன். விவசாயிகளுக்கு உதவுவதில் பிரதமர் மோடி எப்போதும் தாமதம் செய்ய மாட்டார்.
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து எம்எல்ஏக்களும் ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். அதேபோல, நவராத்திரிக்கு முன்பாக, 395 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை பிரதமர் மோடி குறைத்தார். பல அத்தியாவசியப் பொருட்களுக்கு இப்போது ஜிஎஸ்டி வரியே இல்லை, இவ்வாறு அவர் கூறினார்.