ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு அஞ்சல் தலை வெளியிடுகிறார் மோடி
ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு அஞ்சல் தலை வெளியிடுகிறார் மோடி
ADDED : அக் 01, 2025 03:49 AM

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் இன்று துவங்குகிறது. டில்லியில் நடக்கும் கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்று, சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நாணயம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்.
கடந்த 1925ல், மஹாராஷ்டிராவின் நாக்பூரில் டாக்டர் கேஷவ் பலிராம் ஹெட்கேவார், ஆர்.எஸ்.எஸ்., என்றழைக்கப்படும், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தை துவங்கினார். தன்னார்வலர்கள் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, கலாசார விழிப்புணர்வு, ஒழுக்கம், சேவை, சமூக பொறுப்புணர்வு உள்ளிட்ட பண்புகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறது.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டங்கள் நாடு முழுதும் துவங்கி நடைபெறவுள்ளன. டில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில், ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் இன்று துவங்கவுள்ளது. இதில், தலைமை விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இந்நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, நாட்டிற்கு அளித்த பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்டு, பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
-- நமது டில்லி நிருபர் -