ADDED : ஜன 16, 2025 09:35 PM
விக்ரம் நகர்:“அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என, ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் வலியுறுத்தி உள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
டில்லி மதுபான கொள்கை வழக்கில் பொய் குற்றச்சாட்டில் ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மதுக் கொள்கை ஊழல் என்று அழைக்கப்படுவது, ஒரு பொய் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மற்றும் என் கைதுகள் சட்டவிரோதமானவை.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது அவர்கள் ஒரு அனுமதி தேவை என்பதை உணர்ந்துள்ளனர். இந்த வழக்கு பா.ஜ.,வால் ஜோடிக்கப்பட்டது என்பதை இது காட்டுகிறது.
இந்த சட்டவிரோத கைதுகளுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிற ஆம் ஆத்மி தலைவர்களிடம் பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.