தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் பிரிட்டனுடன் கையெழுத்திடும் மோடி
தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் பிரிட்டனுடன் கையெழுத்திடும் மோடி
ADDED : ஜூலை 20, 2025 03:23 AM
புதுடில்லி: பிரிட்டன் அரசுடன் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த தாராள வர்த்தக ஒப்பந்தத்தில், வரும் 23ம் தேதி அரசுமுறை பயணமாக அந்நாட்டிற்கு செல்ல உள்ள பிரதமர் மோடி கையெழுத்திட உள்ளார்.
இந்தியாவுக்கும், ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கும் இடையே எப்.டி.ஏ., எனப்படும் தாராள வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சு 2022 ஜனவரியில் துவங்கியது.
பலகட்ட பேச்சு நடத்தப்பட்ட நிலையில், சமீபத்தில் இந்த ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து, பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக வரும் 23, 24ம் தேதி பிரிட்டன் செல்ல உள்ளார்.
அப்போது, அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டாமரை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சு நடத்த உள்ளார்.
இதைத்தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரியவந்துள்ளது. இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் வாயிலாக, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கார்கள், துணிகள், வேளாண் உட்பட 99 சதவீத பொருட்களுக்கு வரி விலக்கு கிடைக்கும்.
அதன்பின், நம் அண்டை நாடான மாலத்தீவுகளுக்கு வரும் 25, 26 ஆகிய இரண்டு நாட்கள், பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக செல்ல உள்ளார்.
அந்நாட்டின் 60வது தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் அவர், அந்நாட்டு அதிபர் முஹமது முய்சுவை சந்திக்கிறார்.
கடந்த ஆண்டு இந்தியா வந்த சீன ஆதரவாளரான மாலத்தீவு அதிபர் முய்சு, தங்கள் நாட்டிற்கு வர பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதை ஏற்று, பிரதமர் மோடி இப்பயணத்தை மேற்கொள்கிறார். இதன் வாயிலாக, அதிபராக முஹமது முய்சு பதவியேற்ற பின் மாலத்தீவுக்கு முதன்முறையாக மோடி செல்ல இருப்பதால், இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.