ADDED : பிப் 26, 2024 01:38 AM

தேவபூமி துவாரகா : குஜராத்தின் பேட் துவாரகா தீவுக்கு அருகே கடலில் மூழ்கியுள்ள பண்டைய துவாரகா நகரில், பிரதமர் நரேந்திர மோடி வழிபட்டார்; 'ஸ்கூபா டைவிங்' எனப்படும் ஆழ்கடலில் நீச்சலடித்து பிரார்த்தனை செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, தேவபூமி துவாரகா மாவட்டத்தில், துவாரகா நகருக்கு அருகில் அமைந்துள்ள பேட் துவாரகா தீவுக்கு அருகே, கடலில் மூழ்கியுள்ள பண்டைய துவாரகா நகருக்கு சென்றார்.
தெய்வீக அனுபவம்
இதற்காக, ஸ்கூபா டைவிங் எனப்படும் ஆழ்கடலில் நீச்சலடித்து, கடற்படை ஆழ்கடல் வீரர்கள் உதவியுடன் சென்றார். ஸ்கூபா டைவிங் செய்வதற்கான ஹெல்மெட் அணிந்தார். காவி நிறத்தில் பாரம்பரிய உடையுடன் இருந்த அவர், கடலுக்குள் மூழ்கிய நகரில் சம்மணமிட்டு பிரார்த்தனை செய்தார்.
மேலும், கையில் எடுத்துச் சென்ற மயிலிறகை காணிக்கையாகச் செலுத்தினார். சிறிது நேரம் அங்கு தியானத்தில் இருந்த அவர், பண்டைய துவாரகா நகரின் பகுதிகளை பார்த்தார்.
ஹிந்து கடவுள் கிருஷ்ணர் ஆட்சி புரிந்த துவாரகா நகரம், மிகவும் திட்டமிட்டு கட்டப்பட்ட நகரமாகக் கருதப்படுகிறது. கட்டடக் கலைக்கான கடவுளாகக் கருதப்படும் விஸ்வகர்மா இந்த நகரை வடிவமைத்ததாகக் கூறப்படுகிறது.
இது கடலுக்கடியில் மூழ்கியுள்ளது. தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, அதன் சில பகுதிகளை மீட்டுள்ளனர். ஆழ்கடலில் நீச்சலடித்து சென்று அதை பார்க்க முடியும்.
இந்தப் பயணத்துக்குப் பின், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'நீரில் மூழ்கியுள்ள துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீக அனுபவம். ஆன்மிக மகத்துவம் மற்றும் காலத்தால் அழியாத பக்தியின் ஒரு பண்டைய சகாப்தத்துடன் நான் இணைந்திருப்பதை உணர்ந்தேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்' என, அவர் குறிப்பிட்டார்.
மகிழ்ச்சி
துவாரகாவில் உள்ள கிருஷ்ணர் கோவிலிலும் அவர் வழிபட்டார். இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், தன் அனுபவத்தை பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:
பண்டைய துவாரகாவில் வழிபட்டது ஒரு தெய்வீக அனுபவமாகும். இது ஒரு தைரியமான முயற்சி என்பதை விட, நம்பிக்கையைச் சார்ந்தது.
அங்கு இருந்தபோது, அந்த பண்டைய நகரைத் தொட்டபோது, 21ம் நுாற்றாண்டில், இந்தியாவின் பிரமாண்ட வளர்ச்சி என் கண் முன்னே வந்து சென்றது. கடலுக்கடியில் இருந்தபோது, நம் நாட்டை வளர்ந்த நாடாக்க வேண்டும் என்ற உறுதி மேலும் வலுபட்டுள்ளது.
இந்த புனித நகரை பார்க்க வேண்டும்; அதை தொட வேண்டும் என்ற என் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு திரில்லான அனுபவமாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.

