கொரோனாவில் இறந்தவர்களை விட சாலை விபத்துகளில் இறந்தவர்கள் அதிகம்: மத்திய அமைச்சர் தகவல்
கொரோனாவில் இறந்தவர்களை விட சாலை விபத்துகளில் இறந்தவர்கள் அதிகம்: மத்திய அமைச்சர் தகவல்
UPDATED : டிச 18, 2025 10:55 PM
ADDED : டிச 18, 2025 09:59 PM

புதுடில்லி: ''இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று அல்லது போர்களில் இறந்தவர்களை விட சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயிரிழக்கின்றனர்,'' என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் லோக்சபாவில் அளித்த பதிலில் கூறியதாவது: மனிதர்களின் நடத்தை காரணமாக சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என்பதை சோகத்துடன் கூறுகிறேன். சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து யாரும் கவலைப்படவில்லை. இந்தியாவில் ஆண்டுதோறும் 1.80 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். இது கொரோனா பெருந்தொற்று அல்லது போர்களில் இறந்தவர்களை விட அதிகம் ஆகும். இளம் வயதினர் தான் அதிகளவில் இறக்கின்றனர்.
எம்பிக்கள் தங்களது தொகுதிகளில் சாலை பாதுகாப்பு பிரசாரங்களை நடத்த வேண்டும். போக்குவரத்து விதிகளைத் தங்களின் வாகனம் ஓட்டும் முறைக்குத் தொடர்பில்லாதவை எனக் கருதி மக்கள் புறக்கணிப்பதாலேயே பெரும்பாலான விபத்துகள் நிகழ்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் வெளியிட்ட புள்ளி விவரத்தில் இந்தியாவில் நடந்த சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 66 சதவீதம் பேர் 18 முதல் 34 வயது வரை உடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
80 கிமீ., வேகத்தில்பயணம்
பார்லிமென்டில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், 2026 ம் ஆண்டில், தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளுக்கு இடையே கார்கள், மணிக்கு 80 கி.மீ., வேகத்தில் பயணிக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளிக்கிறேன். இதற்காக பொருத்தப்படும் கேமராக்கள் மூலம் வாகனத்தின் எண் மற்றும் பாஸ்ட்டாக் ஆகியவை பதிவு செய்யப்பட்டு, கட்டணம் தானாக வங்கிக்கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும்.
தொழில்நுட்பம் மூலம் வாகனம் செல்லும் வேகத்தை கணக்கீடு செய்ய முடியும். செயற்கைக்கோள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவை குறித்து மற்ற விஷயங்கள் ஆய்வு செய்யப்பட முடியும். இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பது குறையும். எரிபொருள் மிச்சமாவதுடன், அரசுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும்.சாலைகளின் தரத்தை உயர்த்த கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். தேசிய நெடுஞ்சாலைகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பு. மாநில நெடுஞ்சாலைகளுக்கு அல்ல. நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சாலைகளுக்கு நான் பொறுப்பு கிடையாது. தேசிய நெடுஞ்சாலைகளில் மோசமான பணிகளை செய்யும் ஒப்பந்ததாரர்கள், 2ஆண்டுகளுக்கு தடை செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

