ADDED : ஜன 27, 2025 02:52 PM

பாலக்காடு: கேரளாவில் தாயும் மகனும் வெட்டிக்கொல்லப்பட்டனர். கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
பாலக்காடு மாவட்டம் நெம்மாறா அருகேயுள்ள போத்துண்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வெட்டக்கொல்லப்பட்டவர்கள் லட்சுமி என்றும் அழைக்கப்படும் மீனாட்சி,72, அவரது மகன் சுதாகரன்,53, என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் அவர்களது வீட்டிற்கு வெளியே வெட்டிக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:
இந்தக் குற்றத்தைச் செய்தவர் அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர் செந்தமாரா, 57 என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சுதாகரனின் மனைவியைக் கொன்றதாகக் கூறி சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
செந்தமாரா, சுதாகரனைத் தாக்குவதைத் தடுக்க முயன்றபோது லட்சுமி தாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. சுதாகரன் சம்பவ இடத்திலேயே இறந்தார், அவரது தாயார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போது இறந்தார்.
சுதாகரனின் குடும்பத்தினரின் தலையீடு காரணமாகவே தனது மனைவியும் குழந்தைகளும் தன்னை விட்டுச் சென்றதாக செந்தமாரா நம்பியதால், அவர்கள் மீது அவருக்கு பகை இருந்து வந்தது.
சம்பவத்திற்குப் பிறகு தப்பி ஓடிய செந்தமாராவைக் கண்டுபிடிக்க 20 பேர் கொண்ட குழு, விசாரணையை தொடங்கியுள்ளது.
இவ்வாறு போலீசார் கூறினர்

