நாட்டு மாடுகளுக்கு மாநில தாய்ப்பசு அந்தஸ்து; அறிவித்தது மகாராஷ்டிரா அரசு!
நாட்டு மாடுகளுக்கு மாநில தாய்ப்பசு அந்தஸ்து; அறிவித்தது மகாராஷ்டிரா அரசு!
ADDED : செப் 30, 2024 08:02 PM

மும்பை: நாட்டு மாடுகளுக்கு, மாநில தாய்ப்பசு என்று பொருள்படும் வகையில் ராஜ்யமாதா- கோமாதா அந்தஸ்து வழங்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மாநில அமைச்சரவையில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநில விவசாய, பால்வளம், கால்நடை மற்றும் மீன்வளம் ஆகிய துறைகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:வேதகால நாகரிகத்தில் இருந்தே, இந்திய கலாசாரத்தில் பசுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவை தெய்வமாகவும் கருதப்படுகிறது.
நாட்டுப்பசுக்கள் தரும் பால், மனிதனின் ஆரோக்கியத்திற்கும், சிறுநீர் ஆயுர்வேத மருத்துவத்திற்கும், பஞ்சகவ்யம், இயற்கை விவசாய முறைக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு நாட்டு மாடுகளுக்கு, மாநில தாய்ப்பசு அந்தஸ்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ''நாட்டு மாடுகள், விவசாயிகளுக்கு மிகப்பெரிய வரம் ஆக பார்க்கப்படுகின்றன. அதன் காரணமாகவே, அவைகளுக்கு மிகப்பெரிய மதிப்பளிப்பதற்காக, ராஜ்யமாதா கோமாதா என அந்தஸ்து அளிக்க முன்வந்துள்ளோம்,'' என்றார்.