சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாதாவின் தாய் சுட்டுக்கொலை
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாதாவின் தாய் சுட்டுக்கொலை
ADDED : ஜூன் 27, 2025 08:47 PM
சண்டிகர்:சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாதா ஜக்கு பகவான்புரியா, தாய் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பஞ்சாப் மாநிலத்தின் பிரபல தாதா ஜக்கு பகவான்புரியா. இவர் மீது ஏராளமான குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட ஜக்கு, பதிண்டா சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில், அசாம் மாநிலம் சில்சார் சிறைக்கு மாற்றப்பட்டார்.
நேற்று முன் தினம், தரன் தரன் நகருக்கு சென்றிருந்த ஜக்குவின் தாய் ஹர்ஜித் கவுர்,52, மற்றும் கரண்வீர் சிங் ஆகிய இருவரும் படாலாவுக்கு காரில் வந்தனர். படாலா சிவில் லைன்ஸ் காதியன் சாலையில் பைக்கில் வந்த இருவர், காருக்குள் இருந்த ஹர்ஜித் மற்றும் கரண்வீர் ஆகிய இருவரையும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பினர்.
ரத்தவெள்ளத்தில் கிடந்த இருவரும் அமிர்தசரஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து, படாலா போலீசார் வழக்குப் பதிவு செய்து, கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பகவான்பூரைச் சேர்ந்த ஹர்ஜித் கவுர், 2-3 ஆண்டுகளாக படாலாவில் வாடகை வீட்டில் வசித்தார்.