மனைவி பெயரில் மனை ஊழல்; சிக்கலில் மாட்டினார் சித்தராமையா!
மனைவி பெயரில் மனை ஊழல்; சிக்கலில் மாட்டினார் சித்தராமையா!
UPDATED : செப் 24, 2024 01:37 PM
ADDED : செப் 24, 2024 12:22 PM

பெங்களூரு: 'மூடா' முறைகேட்டில் தன் மீது விசாரணை நடத்த அனுமதி அளித்த கவர்னர் தாவர்சந்த் கெலாட் உத்தரவை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் முதல்வர் சித்தராமையா தொடர்ந்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், அவரது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மூடா
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 'மூடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வரின் மனைவி பார்வதிக்கு, 14 மனைகள் ஒதுக்கப்பட்டன. இதில், அதிகாரம் துஷ்பிரயோகம் செய்து, முதல்வர் சித்தராமையா முறைகேட்டில் ஈடுபட்டதாக, பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆபிரஹாம், மைசூரு லோக் ஆயுக்தா போலீசில் புகார் அளித்திருந்தார். இதன்படி, முதல்வர் மீது விசாரணை நடத்த அனுமதி கோரி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் அளித்தார்.
இதற்கு விளக்கம் கேட்டு, முதல்வருக்கு அனுப்பிய நோட்டீசுக்கு, கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நோட்டீசை திரும்ப பெறும்படி கவர்னருக்கு ஆலோசனை கூறும் வகையில், அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கிடையில், மைசூரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஸ்நேமயி கிருஷ்ணா, பிரதீப் குமார் ஆகியோரும், முதல்வர் மீது விசாரணை நடத்த, கவர்னரிடம் அனுமதி கோரினர். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவு 17 ஏ வின் கீழ், முதல்வர் மீது விசாரணை நடத்த, ஆகஸ்ட் 17ம் தேதி கவர்னர் அனுமதி அளித்தார்.
காங்கிரஸ் போராட்டம்
இதற்கு எதிராக மாநிலம் முழுதும், முதல்வர் உட்பட காங்கிரஸ் அமைச்சர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், கவர்னர் அளித்த அனுமதியை ரத்து செய்யும்படி உத்தரவிட கோரி, ஆக., 19ம் தேதி, உயர்நீதிமன்றத்தில் முதல்வர் ரிட் மனு தாக்கல் செய்தார்.
இம்மனு மீது, முதல்வர் தரப்பில் உச்சநீதிமன்ற மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, ரவிவர்மா குமார், கவர்னர் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மாநில அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி உட்பட அனைத்து தரப்பு வக்கீல்களின் வாதம், இம்மாதம் 12ம் தேதி நிறைவு பெற்றது.
மேலும், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில், மூடா முறைகேடு தொடர்பாக, முதல்வர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி, ஸ்நேமயி கிருஷ்ணா, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், உயர்நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை, விசாரணையை ஒத்திவைக்கும்படி, சிறப்பு நீதிமன்றத்துக்கு, உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவு 17 ஏ வின் கீழ், முதல்வர் மீது விசாரணை நடத்த, கவர்னர் அளித்த அனுமதி சரியாகவே உள்ளது என்று கூறி, சித்தராமையாவின் மனுவை, நீதிபதி நாகபிரசன்னா தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பு அளித்தார். இதனால், சித்தராமையாவின் முதல்வர் பதவிக்கு ஆபத்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேல் முறையீடு
இது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து, மூத்த வக்கீல்களுடன், முதல்வர் சித்தராமையா, அவசர ஆலோசனை நடத்தினார். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.