ADDED : டிச 26, 2024 12:52 AM
மும்பை:   மும்பையை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளரிடம் இருந்து, 'சைபர்' மோசடி வாயிலாக, 7.5 கோடி ரூபாய் அபகரிக்கப்பட்டது. இதில், 4.5 கோடி ரூபாயை போலீசார் மீட்டுள்ளனர்.
மஹாராஷ்டிராவின், மும்பை புறநகர் பகுதியான காண்டிவாலியில் தனியார் நிறுவனம் ஒன்று உள்ளது.
இந்த நிறுவன உரிமையாளரை, 'மொபைல் போன்' வாயிலாக தொடர்பு கொண்ட  மோசடி கும்பல்,  நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து பல்வேறு தவணைகளாக 7.5 கோடி ரூபாயை சுருட்டி உள்ளனர்.
இதையறிந்த நிறுவன உரிமையாளர், சைபர் மோசடி புகார் அளிக்கும் 1930 என்ற தொலைபேசி உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சைபர் போலீசார் சம்பந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொண்டு பேசி,  தனியார் நிறுவன உரிமையாளரிடம் இருந்து சுருட்டப்பட்ட 7.5 கோடி ரூபாயில் 4.65 கோடி ரூபாயை மீட்டுள்ளனர்.
மோசடி நடந்த விதம் குறித்து போலீசார் கூறியதாவது:
சைபர் மோசடியில் ஈடுபடும் நபர்கள், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் மொபைல் எண்ணை தாங்கள் வைத்திருக்கும் சிம் கார்டு உடன் நெட்வொர்க் நிறுவனங்களை ஏமாற்றி இணைக்கின்றன.
பின், உண்மையான வங்கி கணக்கு வைத்துள்ள தனியார் நிறுவன மொபைல் போனுக்கு வரும் ஓ.டி.பி., எனப்படும், ரகசிய குறியீட்டு எண்ணை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சிம் வாயிலாக பெறுகின்றனர்.
சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து பல தவணைகளில் தாங்கள் விரும்பும் வங்கி கணக்குகளுக்கு பணத்தை மாற்றுகின்றனர்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

