ADDED : மார் 18, 2025 11:04 PM

பெங்களூரு : பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் முனிரத்னா, ரமேஷ் ஜார்கிஹோளி கைகோர்த்து, துணை முதல்வர் சிவகுமாருக்கு ஆப்பு வைக்கத் திட்டமிட்டுள்ளனரா என்று கேள்வி எழுந்துள்ளது.
பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கோகாக் ரமேஷ் ஜார்கிஹோளி, ஆர்.ஆர்.நகர் முனிரத்னா. இவர்கள் இருவரும் முன்பு, காங்கிரசில் இருந்தவர்கள்.
காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசுக்கு எதிராக, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.,வில் இணைந்த 17 பேரில் இவர்கள் இருவரும் அடங்குவர்.
பா.ஜ., ஆட்சியில் இருவரும் அமைச்சராக பணியாற்றினர். இவர்கள் இருவரும், துணை முதல்வர் சிவகுமாரின் அரசியல் எதிரிகளாக மாறினர்.
பா.ஜ., ஆட்சியில் பலாத்கார வழக்கில் சிக்கியதால், ரமேஷ் அமைச்சர் பதவியை இழந்தார். இதன் பின்னணியில் சிவகுமார் இருப்பதாக பகீர் தகவல் கூறினார்.
கடந்த ஆண்டு பலாத்கார வழக்கில், முனிரத்னாவும் கைது செய்யப்பட்டார். தன்னை சிறைக்கு அனுப்பியது சிவகுமார் தான் என, சில தினங்களுக்கு முன்பு வெளிப்படையாக கூறினார். இதற்கிடையில் நேற்றைய சட்டசபை கூட்டத்தொடரின்போது, ரமேஷும், முனிரத்னாவும் நீண்ட நேரம் ஏதோ பேசிக் கொண்டு இருந்தனர்.
டீ குடிப்பதற்காக சட்டசபையில் இருந்து ரமேஷ் வெளியே சென்றபோது, அவரை பின்தொடர்ந்து முனிரத்னாவும் சென்றார்.
சிறிது நேரத்தில் அவர் மட்டும் திரும்பி வந்தார். இரண்டு பேரும் கைகோர்த்து, சிவகுமாருக்கு ஆப்பு வைக்க ஏதாவது திட்டமிட்டு உள்ளனரா என்று, கேள்வி எழுந்துள்ளது.