ADDED : ஜன 20, 2025 07:04 AM

மாண்டியா: ஸ்ரீரங்கபட்டணத்தில் முன்பகை காரணமாக, ரவுடி ஒருவரை, ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது.
மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணாவின் பாலஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரீத், 31, ரவுடி.
நேற்று முன்தினம் இரவு 11:00 மணி அளவில், தனது தோட்டத்தில், நண்பர்கள் கார்த்திக், அர்ஜுன் கவுடாவுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், சுப்ரீத்தை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். அங்கிருந்த அர்ஜுன் கவுடாவை, மரத்தில் கட்டி வைத்து தடியால் தாக்கி விட்டு தலைமறைவாயினர்.
இச்சம்பவத்தின் போது, அவர்களின் நண்பர் கார்த்திக், தப்பியோடினார். படுகாயமடைந்த அர்ஜுன் கவுடா, மைசூரு கே.ஆர்., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொலை செய்யப்பட்ட சுப்ரீத், இதே கிராமத்தை சேர்ந்த குந்தா வினோத் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். மேலும், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்.
தகவல் அறிந்த எஸ்.பி., மல்லிகார்ஜுன பாலதாண்டி உட்பட உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்தனர்.
தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.