ADDED : ஜன 29, 2025 01:37 AM
புதுடில்லி, ஷரியத் சட்டங்களுக்கு பதிலாக, நம் நாட்டின் வாரிசு சட்டத்தின் கீழ் ஆளப்பட விரும்புவதாக, முஸ்லிம் பெண் தாக்கல் செய்துள்ள மனு மீது பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்த சபியா என்ற முஸ்லிம் பெண், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
நான் முஸ்லிம் மதத்தில் பிறந்திருந்தாலும் அந்த மதத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. அதிகாரப்பூர்வமாக மதத்தைவிட்டு வெளியேறவில்லை.
சட்டப்பிரிவு 25ன் கீழ், மதத்திற்கான அடிப்படை உரிமையை அமல்படுத்த விரும்புகிறேன். அதில், நம்பிக்கையற்றவர் என்ற உரிமையை வெளிப்படுத்தும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும்.
முஸ்லிம்களின் ஷரியத் சட்டத்தின் கீழ் ஆளப்படுவதை விரும்பாதவர்கள், நம் நாட்டின் வாரிசு சட்டத்தின் கீழ் ஆளப்படுவதை அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரப்பட்டு இருந்தது.
இந்த மனு மீது பதில் அளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனு தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டை நான்கு வாரங்களுக்குள் தெரிவிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு மே 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

