ADDED : டிச 14, 2024 11:19 PM

நாட்டுக்கு சிறப்பான அரசியல் சாசனத்தை வகுத்துக் கொடுத்த பி.ஆர்.அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, நாட்டுக்கு அவரது பங்களிப்பு குறித்தும் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் 'நாகலோக சிற்ப வனம்' அமைந்துள்ளது.
பெங்களூரு பல்கலைக்கழகத்தின், ஞானபாரதி வளாகத்தில் ஐந்து ஏக்கர் பரப்பளவில், நாகலோக சிற்ப வனம் அமைந்துள்ளது. அற்புதமான இந்த வனத்தை பற்றி, பலருக்கும் தெரியவில்லை.
இந்தியாவின் வரலாற்றை தெரிவிக்கும் இடமாகும். 21 உருவச்சிலைகள் இங்குள்ளன. அதிநவீன இந்தியாவை உருவாக்குவதில், மாணவர்களை ஊக்கப்படுத்தும் இடமாக நாகலோக வனம் அமைந்துள்ளது. இந்தியாவுக்கு சிறப்பான அரசியல்சாசனத்தை கொடுத்தவர் அம்பேத்கர். இவரால் அனைத்து சமுதாயத்தினருக்கும், குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், அவர்களுக்கான உரிமையை இந்த சட்டம் அளித்துள்ளது. அனைவரும் சமம் என்பதை உணர்த்துகிறது. தீண்டாமையை ஒழிக்க பாடுபட்டவர். இவரை நினைவுகூரும் வகையில், இப்பூங்கா அமைந்துள்ளது.
அசோக சக்ரவர்த்தி உட்பட, பலரின் அடையாள சின்னங்கள் இங்குள்ளன. 12ம் நுாற்றாண்டில் வாழ்ந்த பசவண்ணரும், தீண்டாமையை எதிர்த்து குரல் கொடுத்தவர். செய்யும் தொழிலே தெய்வம் என்றவர்.
நாகலோக சிற்ப வனத்தில் பசவண்ணரின் உருவச்சிலையும் உள்ளது. இவரும் கூட அம்பேத்கருக்கு துாண்டுதலாக இருந்தவர்.
சாஹு மஹாஜன் போன்ற முற்போக்கு சிந்தனையாளர்களின் படமும் பூங்காவில் இடம் பெற்றுள்ளது. இவர் ஆதரவற்ற, ஒதுக்கப்பட்ட சமூகத்தினருக்கு கல்வி அளித்து, அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றினார்.
இவரை பற்றிய விஷயங்களையும் பூங்காவில் தெரிந்து கொள்ளலாம். நாகலோக சிற்ப வனம், மாணவர்களை மகிழ்விக்கும் பூங்கா மட்டுமல்ல. அவர்களின் கல்விக்கு உதவும் பல்வேறு அம்சங்கள் உள்ளன. ஆராய்ச்சி செய்வோருக்கு பூங்கா மிகவும் உதவியாக உள்ளது.
பல்வேறு மகான்கள், தலைவர்கள், நாட்டின் நலனுக்காக போராடியவர்களை இன்றைய இளம் தலைமுறையினருக்கு அறிமுகம் செய்யும் அற்புதமான இடமாகும். பெங்களூரு பல்கலைக்கழகத்தின் இந்த முயற்சி, பாராட்டத்தக்க விஷயமாகும்
- நமது நிருபர் -.