ஒரு ஏ.டி.எம்., உடைப்பதற்கு வெறும் 10 நிமிஷம் தான் டைம்; மேவாட் கொள்ளையர்களின் திடுக்கிடும் ஸ்டைல்!
ஒரு ஏ.டி.எம்., உடைப்பதற்கு வெறும் 10 நிமிஷம் தான் டைம்; மேவாட் கொள்ளையர்களின் திடுக்கிடும் ஸ்டைல்!
ADDED : செப் 28, 2024 12:22 PM

நாமக்கல்: 'ஒரு ஏ.டி.எம்., மையத்தில் புகுந்தால், 10 நிமிடத்தில் கொள்ளையடித்து புறப்பட்டு விடுவர்' மேவாட் கொள்ளையர்கள். இந்த கும்பலில், 60 முதல் 70 பேர் வரை இருப்பதாக, விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச்சூடு
கேரள மாநிலத்தில் 3 ஏ.டி.எம்.,களில் கொள்ளையடித்துவிட்டு கன்டெய்னர் லாரியில் தப்பிய மர்மநபர்களை நாமக்கல் மாவட்டம் வெப்படை காட்டு பகுதியில் வைத்து தமிழக போலீசார் சுட்டுப்பிடித்தனர். துப்பாக்கிச்சூட்டில் கொள்ளையன் ஜூமான் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாக, அசீன் என்பவரை குண்டுகாயத்துடன் போலீசார் மடக்கினர்.
5 பேர்
பின்னர் கன்டெய்னர் லாரியை சோதனையிட்ட போது, உள்ளே வெள்ளை நிற சொகுசு கார் ஒன்றும், ஏ.டி.எம்.,களில் கொள்ளை அடிக்கப்பட்ட 66 லட்சம் ரூபாய் இருப்பதையும் கண்டு அவற்றை கைப்பற்றினர். மற்ற 5 கொள்ளையர்களையும் போலீசார் காட்டுப்பகுதியில் தேடிபிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஹரியானா மாநிலம் மேவாட் கொள்ளையர்கள் என்பது தெரிய வந்தது.
'திடுக்' தகவல்கள்
இந் நிலையில், பிடிபட்ட மேவாட் கொள்ளையர்களிடம் தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
விசாரணை
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியவர்களில் ஒருவர் பலியான நிலையில் காயம் அடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் உள்ளார். உயிருடன் பிடிபட்ட இர்பான், சபீர்கான், சவ்ஹீன், முபாரக் அத், மொகத் இக்ரம் ஆகியோரிடம் வெப்படை போலீஸ் ஸ்டேஷனில் நேற்றிரவு முழுவதும் விசாரணை நடத்தப்பட்டது.
கூகுள் மேப்
சேலம் சரக டி.ஐ.ஜி., உமா, நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ் கண்ணன் உள்ளிட்டோர் விசாரணை செய்தனர். கேரளா ஏ.டி.எம். கொள்ளையை முடித்துவிட்டு, குமாரபாளையத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் கொள்ளை அடிக்க திட்டமிட்டனர். அதற்காகவே கூகுள் மேப் உதவியுடன் திருச்சூரில் இருந்து குமாரபாளையம் வந்துள்ளனர். சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்னரே போலீசில் சிக்கிக் கொண்டனர்.
விமானம்
சிக்கியவர்களில் சபீர் கான், சவ்ஹீன் ஆகிய இருவரும் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்துள்ளனர். பின்னர் சென்னையில் துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர் லாரியை எடுத்துக் கொண்டு திருச்சூர் சென்றுள்ளனர். இவர்கள் 2 பேரும் திருச்சூர் வரும் முன் மொகத் இக்ரம் என்ற மற்றொரு நபர் ஒரு வாரம் முன்னரே திருச்சூர் சென்று எந்த ஏ.டி.எம்.,களில் கொள்ளை அடிக்கலாம் என்று நோட்டம் விட்டுள்ளார்.
மகாராஷ்டிரா
காரில் சென்று கொள்ளை அடித்துவிட்டு கன்டெய்னர் லாரியுடன் செல்லும் போது தான் சிக்கி இருக்கின்றனர். 2021ம் ஆண்டில் மகாராஷ்டிராவில் ஒரு ஏ.டி.எம்.மில் கொள்ளை அடித்து இதே கும்பல் சிக்கி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு ஏ.டி.எம்.களில் கொள்ளை அடித்ததும் இவர்களே தான். திருச்சூருக்கு முன், கடந்த வாரம் ஆந்திர மாநிலம் கடப்பாவில் கொள்ளை அடித்துள்ளனர்.
மொழி பிரச்னை
ஏ.டி.எம்., கொள்ளை கும்பல் பிடிபட்டதையடுத்து, ஆந்திர போலீசாரும் வெப்படை வந்துள்ளனர். கொள்ளையர்கள் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் மொழி பிரச்னை உள்ளது. சில தகவல்களை பெறுவதில் தொய்வு ஏற்படுவதால் அதை தவிர்க்க மொழி பெயர்ப்பாளர் உதவியுடன் விசாரணை நடக்கிறது.
விரைவில் விசாரணை
தற்போது வரை 3 மாநிலத்தில் இவர்கள் கைவரிசை காட்டி இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்களுக்கு மேலும் சில மாநிலங்களில் நடைபெற்ற ஏ.டி.எம்., கொள்ளையில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இது பற்றியும் விரைவில் விசாரணை நடத்தப்படும்.
ஸ்டைல்
ஏ.டி.எம்.,களை குறி வைத்து கொள்ளையை வெற்றிகரமாக முடிப்பது மேவாட் கொள்ளையர்களின் ஸ்டைல். இந்த கும்பலில் மொத்தம் 60 முதல் 70 பேர் வரை உள்ளனர். ஒரு பெரிய நெட்வொர்க்காக இருந்து கொள்ளை அடிப்பது இவர்கள் ஸ்டைல். ஒரு ஏ.டி.எம்.மில் நுழைந்தால் 10 நிமிடங்களில் கொள்ளை அடித்து சென்றுவிடுவர். இவர்களுடன் யார், யார் தொடர்பில் உள்ளனர், அனைவரின் வங்கி கணக்குகள், பணப்பரிமாற்றம், தொலைபேசி அழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு போலீசார் கூறி உள்ளனர்.
போலீசார் விசாரணைக்கு பின்னர், அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள். பிறகு அடுத்தக்கட்ட புலன் விசாரணை தொடர்ந்து நடக்கும் என்று தெரிகிறது.